சென்னையில் ஐடி ஊழியர் பார்த்த பார்ட் டைம் ஜாப்.. கொட்டிய பணமழை.. போலீசில் மாட்டிவிட்ட மனைவி
சென்னை: சென்னையில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பது அவ்வப்போது நடக்கிறது. அவர்கள் குறித்து தகவல்கள் வந்த உடன் போலீசார் உடனே அவர்களை கைது செய்கிறார்கள். கஞ்சா விற்று வரும் பணத்தையும்,அவர்களின் சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்வதும் நடக்கிறது. இந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் கஞ்சா விற்றதாக ஐ.டி. ஊழியரை அவரது மனைவி போலீசில் காட்டி கொடுத்தார். இந்த வழக்கில் 2 பேர் கைதாகி இருக்கிறார்கள்
சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கைது செய்யப்படும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். சென்னையில் இளம் வயது மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போதையில் இல்லாமல் இருக்க முடியாது என்று சுற்றுபவர்களை குறி வைத்து சிலர் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்கிறார்கள். என்ன தான் போலீசார் கஞ்சாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தாலும், நூதன முறையில் கடத்தி வந்து விற்பதும் அவ்வப்போது நடக்கிறது.

இதுபற்றி பொதுமக்கள் தகவல் அளித்தால், உடனே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இதனை மக்கள் இதனை கண்டு கொள்ளாமல் விடுவதால், பலர் சீரழிந்து வருகிறார்கள். யாராவது ஒரு சிலரே ரகசியமாக போன் செய்து மாட்டிவிடுகிறார்கள்.. அந்த வகையில் ஐடி ஊழியரை அவரது மனைவியே மாட்டிவிட்டுள்ளார்.
சென்னை ஐடி ஊழியர்
சென்னை திருவொற்றியூர் ரேடியன்ஸ் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் ராஜாவுக்கு 28 வயது ஆகிறது. பி.டெக். பட்டதாரியான இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ராஜா தனது நிறுவனத்தில் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு கஞ்சா விற்க வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தாராம். அவருக்கு இதில் நல்ல பணம் வந்திருக்கிறதாம்.
கஞ்சா
நேற்று முன்தினம் ராஜா கஞ்சாவை எடை போட்டு சிறிய பொட்டலங்களில் வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து தட்டிகேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ராஜா ஆத்திரத்தில் தனது மனைவியை கையால் தாக்கியுள்ளார். காயமடைந்த மனைவி தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மாட்டிவிட்ட மனைவி
கணவரின் தவறான போக்கை தண்டிக்கும் வகையில் இதுகுறித்து ராஜாவின் மனைவி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார் ராஜா வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா சிக்கியது. கஞ்சா விற்ற ராஜாவையும் கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவொற்றியூர் வடக்கு ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் வசிக்கும் எம்.பி.ஏ. பட்டதாரி ஹரிஹரன் (25) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கியதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கில் ஹரிஹரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications