ஜான் பாண்டியன் மகளுக்கு எம்.பி.சீட்? யாருடன் கூட்டணி -எந்தச் சின்னத்தில் போட்டி?
சென்னை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
மருத்துவரான இவர் தனது தந்தை ஜான் பாண்டியனிடம் அரசியல் கற்று கட்சி பணிகளில் இப்போது ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளார். ஜான் பாண்டியனை பொறுத்தவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

பாஜக அதிமுக கூட்டணி இருந்தவரை அந்தக் கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார் ஜான் பாண்டியன். இப்போது அதிமுகவும், பாஜகவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருப்பதால் ஜான் பாண்டியன் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே மருத்துவரும், ஜான் பாண்டியனின் மகளுமான வினோலின் நிவேதா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார். தனது தந்தையும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஓபனாக கூறியிருக்கிறார். இதன் மூலம் இரட்டை இலை சின்னத்திலோ அல்லது தாமரை சின்னத்திலோ ஜான் பாண்டியன் மகள் தேர்தலில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக, பாஜக ஆகிய 2 தரப்பும் ஜான் பாண்டியனை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிகள் முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே ஜெயலலிதா தான் தனக்கு அரசியலில் ரோல் மாடல் என்றும் அவரை போன்று துணிச்சலாக இருக்க வேண்டும் என தாம் எண்ணுவதாக டாக்டர் வினோலின் நிவேதா கூறியுள்ளார்.
அரசியலில் தனது மகனை ஜான் பாண்டியன் முன்னிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகளை முன்னிறுத்துகிறார். இதுவும் நல்ல விஷயம் தான். பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் கால் பதித்து சாதனை புரிந்து வரும் நிலையில் அரசியலிலும் அதிகம் கால் பதிக்க முன்வர வேண்டும்.












Click it and Unblock the Notifications