அதிமுகவுக்கு அதிர்ச்சியளித்த ஜான்பாண்டியன்... ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்?
Recommended Video
சென்னை: நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்து பேசிய நிலையில், அவர் ஆதரவு தருவது பற்றி எந்த உறுதியும் அளிக்கவில்லையாம்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றே தீருவது என்ற லட்சியத்தோடு அதிமுக தேர்தல் பணியாற்றி வருகிறது. இதற்காக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கோரப்பட்டு வருகிறது.

தேமுதிக, பாமக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஜாதிக்கட்சிகளையும் அமைச்சர்கள் விடுவதாக இல்லை. ஏற்கனவே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியிடம் அதிமுக ஆதரவு கேட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனிடமும் அதிமுக ஆதரவு கேட்டுள்ளது.
தென்மாவட்டத்தில் கணிசமான வாக்குவங்கிகளை கொண்டது ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம். இதனை மனதில் வைத்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்டோர் ஜான்பாண்டியனிடம் ஆதரவு கேட்டார்களாம் அவரோ தேர்தல் வந்தால் மட்டுமே உங்களுக்கு என்னை ஞாபகம் வருகிறதா என்றும், இதுவரை பல கோரிக்கைகள் அளித்தும் முதல்வர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என குமுறியுள்ளார்.
இதனால் திகைத்துப்போன அமைச்சர்கள் இடைத்தேர்தல் முடியட்டும், அதுபற்றி பேசிக்கலாம் என உறுதியளித்துள்ளனர். இருப்பினும் சமாதானம் ஆகாத ஜான்பாண்டியன், உடனே முடிவு சொல்லமுடியாது, கட்சியினரிடம் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன் எனக் கூறி அனுப்பிவைத்தாராம். இதனால் அதிமுக முகாம் சற்று அதிர்ச்சியில் தான் உள்ளதாம்.












Click it and Unblock the Notifications