NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: "என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணைவதை ஆதவ் அர்ஜூனா தடுத்தார்." என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தான் மட்டுமே அறிவாளி என்ற ரீதியில் செயல்படுவதாக அவரது மைத்துனரான ஜோஸ் சார்லஸ் மார்டின் விமர்சித்துள்ளார்.
லட்சிய ஜனநாயக கட்சியை அண்மையில் தொடங்கிய மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் 2 சீட்களில் லஜக போட்டியிடுகிறது. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணைவதை ஆதவ் அர்ஜுனா தடுத்தார். த.வெ.க.விற்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. எனக்கும் என் தந்தைக்கும் இடையே பிளவை ஆதவ் அர்ஜுனா ஏற்படுத்தினார். தான் மட்டுமே அறிவாளி என்ற ரீதியில் ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொளத்தூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பல ஆஃபர்களை தவெக தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆஃபர்களையும் விஜய் நிராகரித்துவிட்டார். 90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம் என்று விஜய் கூறிவிட்டார்" எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. சார்பில் நடைபெற்ற இர்தார் நோன்பு நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அந்த கூட்டணி, இந்தக் கூட்டணி என எந்த கூட்டணிக்கும் தவெக போகவில்லை, நாம் தனித்துதான் போட்டியிடுகிறோம். எனவே யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் தவெக இடம்பெறாததற்கு ஆதவ் அர்ஜுனா தான் காரணம் என லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தற்போது கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications