ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நான்...
சென்னை: ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நான்.. என்ற குரல் கோட்டையில் எதிரொலிக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு தவெகவினரிடம் இப்போதே மலர தொடங்கிவிட்டது.. தவெக தலைவர் விஜய் வீட்டில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன.. தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி, இன்று அரசியல் களத்தில் ஒரு மாநிலத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் சக்தியாக உயர்ந்திருக்கும் விஜய்யின் வளர்ச்சி என்பது எவராலும் அவ்வளவு எளிதில் புறந்தள்ள முடியாத ஒன்று. சினிமா, அரசியல் என விஜய்யின் வெற்றி தமிழகத்தால் கவனிக்கப்பட்டும் வருகிறது.
1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு சினிமாவின் மூலம் தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானபோது, விஜய்க்கு கிடைத்ததெல்லாம் பாராட்டுகளை விட அவமானங்களே அதிகம்.

நெளிந்த தகர டப்பா மூஞ்சி
ஒரு சராசரி இளைஞனின் தோற்றத்துடன் திரையில் தோன்றிய விஜய்யை, அன்றைய ஊடகங்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தன.. குறிப்பாக ஒரு பிரபல வார இதழ் அவரது தோற்றத்தை "நெளிந்த தகர டப்பா மூஞ்சி" என்று விமர்சித்ததும், அதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஏ.சி 60 க்கும் மேற்பட்டோருடன் சென்று அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கியதும் கசப்பான வரலாறு.
இன்று பத்திரிகை தர்மம் பேசும் விஜய், அன்று ஊடக அலுவலகம் தாக்கப்பட்டபோது முரணாக இருந்ததாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு போன்றவர்கள் சாடினாலும், அந்த அவமானங்கள்தான் விஜய்யை இன்று 600 கோடி வசூல் நாயகனாக மாற்றிய உரமாகும்..
ஆரம்பத்தில் 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற மென்மையான காதல் கதைகள் மூலம் குடும்பங்களின் மனதை வென்ற விஜய், 2003இல் வெளியான 'திருமலை' படத்திற்குப் பிறகு ஒரு முழுநேர ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார்..
வசூல் மன்னன் விஜய்
'கில்லி', 'போக்கிரி' தொடங்கி 'துப்பாக்கி', 'கத்தி', 'லியோ' வரை அவர் தொட்டதெல்லாம் பொன்னானது.. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா என அண்டை மாநிலங்களிலும் தனது வசூல் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் சினிமாக்கள் முடங்கியிருந்தபோது, மாஸ்டர் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களைத் தியேட்டருக்கு வரவழைத்து இந்தியத் கோடம்பாக்கத்தையே வியக்க வைத்தார் விஜய்..
31 ஆண்டு கால திரைப்பயணத்தில் "பாக்ஸ் ஆபீஸ் கிங்" என்ற அந்தஸ்தைப் பெற்ற விஜய், உச்சத்தில் இருக்கும்போதே தனது அடுத்த இலக்காக அரசியலை தேர்ந்தெடுத்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரசியலிலும் டாப்
இதன்பிறகு, அரசியலில்"'தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியைத் தொடங்கியபோது, பல அரசியல் விமர்சகர்கள் இது மற்றொரு சினிமா நடிகரின் முயற்சி என்றுதான் கேலி செய்தனர்.
ஆனால், தமிழக அரசியலில் நிலவி வந்த சாதியப் படிநிலைகளை உடைப்பதில் சினிமா ஒரு கருவியாக இருந்ததைப் போல, விஜய்யின் வருகையும் சாதி ரீதியான அணிதிரட்டலுக்கு பெரிய சவாலாக அமைந்தது.. திமுக, அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளுக்கு மத்தியில், சாதி அடையாளங்களை கடந்த இளைஞர்களின் பொதுவான அடையாளமாக தவெக உருவெடுத்தது.
குறிப்பாக, தேர்தல் அரசியலில் பலமான சாதிய செல்வாக்கு கொண்ட கட்சிகளின் கூட்டணி அரசியலை விஜய்யின் வருகை ஆட்டம் காண வைத்தது.. 12.5 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக விஜய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
முதலிடத்தில் தவெக?
இன்று 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஒட்டுமொத்த தமிழகத்தையும் திகைக்க வைக்கும் வகையில் தவெக முன்னிலை பெற்று வருகிறது.
சுமார் 115 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்று முதலிடத்தில் இருப்பதும், ஆளுங்கட்சியான திமுக 49 இடங்களுடன் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதும் தமிழக அரசியலில் ஒரு மவுனப் புரட்சி நடந்திருப்பதை உறுதி செய்கிறது. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பட்டாளத்தையே பின்னுக்குத் தள்ளி விஜய் முன்னிலை பெறுவது வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது..
"ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நான்"
"ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நான்" என்று தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கும் தருணத்தை நோக்கி அவர் மிக நெருக்கமாக வந்துவிட்டதாக தவெகவினர் மகிழ்ச்சியுடன் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
118 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கை நோக்கி தவெக அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதால், ஒரு நடிகராக சினிமாவில் பார்த்த விஜய், இப்போது ஒரு மக்கள் தலைவனாக நாற்காலியை அலங்கரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன..
சினிமாவிலும் அரசியலிலும் பலவிதமான அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்தாலும், விடாமுயற்சி ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு இன்று அரியணையை நெருங்கியுள்ள விஜய்யின் இந்தப் பயணம் தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இன்று மாலைக்குள் முழுமை பெறலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்!!












Click it and Unblock the Notifications