ஜோதிமணிக்கு “டிக்கெட்”.. காங்கிரஸ் தந்த கவுரவம்! 25 ஆண்டுல.. “நெகிழ்ச்சி” -2வது சுதந்திர போராட்டமாம்
சென்னை: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமை பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு காங்கிரஸ் தலைமை வழங்கி இருக்கிறது.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறார்.
இந்த பாத யாத்திரையை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஜோதிமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் ஜோதிமணி, "கடந்த 25 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி இருக்கேன்.
கல் வீசிய காவி வேட்டி.. கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்! படத்தை வைத்து தூக்கிய போலீஸ் -மேலும் மூவர் கைது
மகத்தான வாய்ப்பு
எல்லாவற்றையும் விட தலைவர் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் நமது தேசம் எதிர்நோக்கி இருக்கும் வாழ்வா? சாவா? போராட்டம். ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் மோடி ஆட்சி இந்த தேசத்தின் ஆன்மாவை மதம்,சாதியின் அடிப்படையில் கூறுபோட்டுள்ளது.
2வது சுதந்திர போராட்டம்
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பேரழிவை சந்தித்துள்ளன. காயம்பட்டுக் கிடக்கும் இந்த தேசத்தின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், வெறுப்பால் பிரிந்துகிடக்கும் இதயங்களை ஒருங்கிணைத்து, அன்பை விதைக்கவும், அழிந்துபோன பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும் காங்கிரஸ் கட்சி இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துகிறது. இது மக்களுக்கான ஒரு மாபெரும் இயக்கம்.
கன்னியாகுமரியில் தொடங்குகிறது
இந்த மாபெரும் மக்கள் இயக்கம், தொன்மையும்,பெருமையும் மிக்க தமிழ் மண்ணில், கன்னியாகுமரியில் இருந்து துவங்குகிறது.
இப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய அன்னை திருமிகு.சோனியா காந்தி, தலைவர் திரு.ராகுல்காந்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.திக்விஜயசிங் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்தியாவை மீட்டெடுப்போம்
இந்த நடைபயணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்கிற ஒற்றை நோக்கோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ,தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பணியினை சிறப்பாக செய்துமுடிப்போம். இந்தியாவை மீட்டெடுப்போம்." என்றார்.