பொன்முடி வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தார்! NR இளங்கோ
சென்னை: பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். அப்போது பொன்முடியின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான கோப்புகளை கையாண்டிருக்கிறார், இதை சுப்ரீம் கோர்ட்டில் முன்வைப்போம் என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
2006- 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் அமைச்சர் பொன்முடி.
இந்நிலையில், பொன்முடி சார்பில் ஐகோர்ட்டில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்வோம். அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு பொன்முடி மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். புலன் விசாரணை அதிகாரி, பொன்முடி வருமானத்துக்கும், அவரது மனைவியின் வருமானத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்தவில்லை. அந்த சந்தேகத்தின் காரணமாகவே உயர் நீதிமன்றம் விடுதலையை ரத்து செய்துள்ளது. ஆதாரங்களின் அடிப்படியில் நிச்சயம் இந்த வழக்கில் வெற்றியடைவோம். திமுக பலமாக உள்ளது. அதை பார்த்து பாஜக பயப்படுகிறது" என்றார்.
மேலும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "எங்களைப் பொறுத்தவரை நீதிபதி என்பவர் அப்பழுக்கற்றவர். எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால், அவர் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். அப்போது இந்த வழக்கில் பொன்முடியின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான கோப்புகளை கையாண்டிருக்கிறார்.
Laten Bias என சட்ட முறையில் கூறுவார்கள். விசாரணையின் போது இந்த விவரம் தெரியவரவில்லை. நேற்று தான் தகவல் கிடைத்தது. நீதிபதியிடம் எடுத்து சொன்னோம். "நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்" என அவர் பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை. இதனை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம். சுப்ரீம் கோர்ட்டில் தண்டனை நிறுத்தப்பட்டால், பொன்முடியின் தகுதி இழப்பும் நீங்கிவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
பொன்முடி வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு முன்பு 2011- 2015 காலத்தில் தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராக பணியாற்றியவர். அப்போது, பொன்முடியின் சொத்துகளை முடக்குவதற்கு அவர் உத்தரவிட்டதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications