ஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு!
சென்னை: ஆவின் பால் நிறுவனத்தில் 100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாகவும் எனவே ஓய்வு பெற்ற உயார்நீதமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014 ம் ஆண்டு, ஆவின் பாலை விநியோகம் செய்யும் லாரிகளை இயக்கி வந்த ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்துக்கு பாலை கொண்டு செல்லும் வழியில், பாலை திருடிவிட்டு அதற்கு பதிலாக தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டதன் விளைவாக ஆவின் நிறுவனத்திற்கு நாள் ஒன்றுக்கு 23 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை 150 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வந்த ஆவின், தற்போது நிர்வாக குளறுபடி காரணமாகவும், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தினமும் 3.60 லட்சம் லிட்டர் பாலை தனியாருக்கு விற்பனை செய்ததன் காரணமாகவும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல், விற்பனை, போக்குவரத்துக்கான டெண்டர் நடைமுறைகளை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு, இதுதொடர்பான முழுமையான ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்தது.