தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை? என்ன சொன்னது சந்துரு குழு! சாட்டை எடுக்கப் போகும் முதல்வர்!
சென்னை : ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என்றும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இது, சாதாரண, நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வங்கி அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், காவல் துறையில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டவர்களும் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் வரும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்? முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவாதம்
ஆன்லைன் ரம்மி சூதாட்டம்
இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஆன்லைன் ரம்மி தடை
இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் பல்வேறு முக்கிய பரிந்துரைகளை நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று மாலை தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த பரிந்துரை குழு ஆலோசனையின் போது ஆன்லைன் ரம்மிக்கும் தடை விதிக்கும் வகையில் புதிய அவசர சட்டம் கொண்டு வருவது பல புதிய தொழில்நுட்ப திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
நீதியரசர் சந்துரு குழு
இந்நிலையில் தமிழக அரசுக்கு நீதியரசர் சந்துரு தாக்கல் செய்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,"ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாகக் கூறப்படுவது தவறு. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு பரிந்துரை
மேலும், ஆன்லைன் விளையாட்டுத் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கைவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்தக் குழு பரிந்துரை செய்கிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.