சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம்! யார் இவர்?
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த கே.ஆர். ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.

யார் இந்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா?
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். சத்தீஷ்கரின் பிலஸ்பூரை சேர்ந்த இவருக்கு தற்போது 61 வயது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
தலைமை நீதிபதிகள் மாற்றம்
சென்னை, ராஜஸ்தான் தவிர மத்திய பிரதேசம், கர்நாடகா, கவுஹாத்தி, பாட்னா, ஜார்காண்ட், திரிபுரா, தெலங்கானா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் சஞ்சீவ் சச்தேவா அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள விபு பக்ரு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்னா ஐகோர்ட்
பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள விபுல் மனுபாய் பஞ்சோலி அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள அசுதோஷ் குமார் கவுகாத்தி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள தர்லோக் சிங் சவுகான் ஜார்கண்ட் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அபரேஷ்குமார் சிங், தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எஸ். ராமச்சந்திர ராவ், திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த், ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications