தமிழகம் என் மாநிலம்..நான் அதன் ஊழியன் : ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பெருமிதம்
உலகின் மிக பழமையான மொழி தமிழ். தமிழக கலாச்சாரம், பண்பாடு, கலைகள் என்னை வியக்கவைத்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு எனது மாநிலம் என்றும், நான் அதன் ஊழியன் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மிக பழமையான நீதிமன்றம். இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி, இன்று பொறுப்பேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் பங்கேற்று புதிய தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சஞ்சீப் பானர்ஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வரவேற்றார். விழாவில் பேசிய சஞ்சீப் பானார்ஜி, உலகின் மிக பழமையான மொழி தமிழ். தமிழக கலாச்சாரம், பண்பாடு, கலைகள் என்னை வியக்கவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மிக பழமையான நீதிமன்றம். இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.
எனது பணிக்கு வக்கீல்களான உங்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும். சிலர் மட்டுமே வக்கீல் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கிறார்கள். பொருளாதாரம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் சேவை முக்கியத்துவம் பெற வேண்டும். இப்போது நான் எனது மற்றொரு வீட்டுக்கு வந்துள்ளேன். இங்குள்ள கலாச்சாரத்தை கற்றுக்கொள்வேன். அரசியலமைப்பை உறுதி செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். இன்றிலிருந்து தமிழ்நாடு எனது மாநிலம். இந்த மாநிலத்தின் ஊழியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி