ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீச்சு.. சட்டம் ஒழுங்கு சரியில்லை.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்
சென்னை: மயிலாடுதுறையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வன்முறை போராட்டம் நடத்தியவர்கள் மீதும் அதை தடுக்காத அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு இன்று ஆளுநர் ரவி சென்றிருந்தார். இங்கு நடந்த ஒரு விழாவுக்கு ஆளுநர் ரவியை அழைக்கக் கூடாது என திராவிடர் கழகம், திவிக, விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
மேலும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் கருப்பு கொடிகள் வீசப்பட்டதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை
ஒரு ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடவடிக்கை கோரியும் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப் போவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை
ஆளுநருக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. ஆளுநரின் கான்வாய்க்கு அருகே வரை போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆளுநர் வாகனம் அந்த வழியாக கடந்த போது போராட்டக்காரர்கள் கான்வாய் மீது கற்களை வீசியுள்ளனர். இவை எல்லாம்ஆளுநரை அச்சமடைய செய்ய திமுக அரசு செய்த வித்தை என்றார்.

உள்துறை அமைச்சர்
இதுகுறித்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் பாஜக தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் காலம் தாழ்த்துவதாக கூறி அவருக்கு எதிராக கடந்த 3 தினங்களாக முதல்வர் ஸ்டாலின் அவதூறு கருத்துகளை கூறி வந்தார். சென்னைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி வந்த போது நடந்த போராட்டத்தை போன்றே ஆளுநருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்கள்
சட்டவிரோத செயல்கள் மீது அரசியலமைப்பின்படி நியமிக்கப்பட்ட அதிகாரியை அச்சுறுத்தலாம் என திமுக கருதுகிறது. கற்கள், தண்ணீர் பாட்டில்கள், கொடி கம்பங்கள் உள்ளிட்டவற்றை ஆளுநர் கான்வாய் மீது வீசியுள்ளனர். போலீஸாரும் அங்கிருந்த போராட்டக்காரர்களை கலைக்கவில்லை.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
ஒரு ஆளுநரின் பாதுகாப்புக்கே திமுக அரசு உத்தரவாதம் கொடுக்க முடியாத போது சாதாரண குடிமக்களின் பாதுகாப்பு கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையே இது காட்டுகிறது. ஆளுநருக்கு பாதுகாப்பு கொடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் மட்டும் காரணம் அல்ல
நீட் விவகாரத்திற்காக மட்டும் ஆளுநரை திமுக அரசு எதிர்க்கவில்லை. பல ஊழல் விவகாரங்கள் ஆளுநரின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதை அவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு அவரை அச்சுறுத்த நீட்டை ஒரு கேடயமாக திமுக அரசு பயன்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி கடமைகளை ஆற்றும் ஆளுநரை திமுக அரசு விரும்பவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications