அண்ணாமலை முதல்வரா? கே.சி.கருப்பண்ணன் சொன்ன கருத்து உண்மையா.. முனுசாமி விளக்கம்
சென்னை: அண்ணாமலையை 2026 இல் முதல்வராக்க வேண்டும் என பாஜக கோரியதால்தான் கூட்டணியிலிருந்து விலகினோம் என சமூகவலைதளங்களில் வந்த தகவலையே முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரியாமல் தவறான தகவலை தெரிவித்துவிட்டார் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, அண்ணாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிவு ஏன் என்பதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால்தான் அதிமுக- பாஜக கூட்டணி முறிவுக்கு வந்தது. இந்த முடிவிற்கு தமிழகம் முழுவதும் அதிமுக மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என கருப்பணன் கூறியுள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் கருப்பணன் கருத்து குறித்து அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி கூறுகையில், பொதுவாக சமூகவலைதளங்களில் பார்த்த சில கருத்துகள் அப்படியே நம் மனதில் பதியும். அது பேசும் போது மனதில் இருப்பது அப்படியே வெளியே வந்துவிடும். அது போல்தான் கருப்பணனும் சில கருத்துகளை சமூகவலைதளங்களில் பார்த்துள்ளார்.
அதை அப்படியே வெளியே சொல்லிவிட்டார். வரும் தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு நன்றாக தெரிந்து விடும். எனவே 2026 இல் முதல்வராக எடப்பாடி பழனிசாமியே வருவார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் பலமும் மக்களுக்கு தெரியும். அது போல் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியில் செய்த நலத்திட்டங்களையும் திமுக ஆட்சியின் அவலங்களையும் எஜமானர்களான மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications