நாங்கள் தான் தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி... தமிழக காங்கிரஸ் கமிட்டி பெருமிதம்..!
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பா.ஜ.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருப்பதாக அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திமுக கூட்டணி
9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது.

நற்சான்றிதழ்
கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழக அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக பயனாளிகளுக்கு முழுமையாக சேருவதற்கு இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும்.

மனப்பூர்வ நன்றி
மக்கள் பங்கேற்கிற ஜனநாயக அமைப்பாக இருக்கிற ஊரக உள்ளாட்சி பொறுப்புகளில் தி.மு.க., தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பாடம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பா.ஜ.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

ஒளிமயம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications