"உங்களால் தான்" என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு.. சிவி சண்முகத்திற்கு பாஜக பதிலடி
சென்னை: அதிமுகவால் தான் சட்டசபை தேர்தலில் பாஜக தோற்றது என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு என பாஜக பொதுச் செயலாளர் கே டி ராகவன் பதில் அளித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இன்றைய தினம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அதிமுக- பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு தோல்வி என சி வி சண்முகம் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு கே.டி. ராகவன் பதில் அளித்துள்ளார். இது போல் எஸ் ஆர் சேகர் உள்ளிட்டோரும் சிவி சண்முகத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வானூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வானூர் பகுதியில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருமான சண்முகம் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

ஆட்சி அமைக்கும்
அதிமுக ஆட்சி அமைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை. நாம் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், தோல்வியை சந்தித்தோம். கூட்டணியால், சிறுபான்மையின ஓட்டுக்களை இழந்து விட்டோம்.

விழுப்புரம் தொகுதி
விழுப்புரம் தொகுதியில் சிறுபான்மையின பிரிவினருக்கு, 20 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளது. ஆனால் நாம் 14 ஆயிரம் ஓட்டில் தொகுதியை இழந்தோம். தோல்வி அடைந்து விட்டோம் என்பதால், துவண்டு விடக்கூடாது. தி.மு.க., மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை கூறி, வெற்றி பெற்றுள்ளனர்.

எதிர்க்கட்சியாக உள்ளோம்
இருப்பினும், நாம் பலமான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளோம். வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் சுறுசுறுப்புடனும், ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும். துரோகிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. விசுவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறினார்.

கே டி ராகவன் எதிர்ப்பு
இவரது இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் "உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

எஸ் ஆர் சேகர் ட்வீட்
அது போல் பாஜக நிர்வாகி எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் BJPயுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் - Ex ADMK அமைச்சர் @CVShanmugamofl இவர் கருத்தை
@OfficeOfOPS @EPSTamilNadu ஏற்கிறார்களா? பதில் சொல்லவேண்டும். இல்லையெனில் action எடுக்க வேண்டும். 87403 ஓட்டுப் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சிவி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications