2வது முறையாக திமுக தலைவரான ஸ்டாலின்.. மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.. கி. வீரமணி வாழ்த்து
சென்னை: திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி நமது முப்பெரும் தலைவர்களின் அறிவுரையை கட்டளையாக்கி, கழகத்தை நடத்தி, வெற்றி வாகை சூடி 'திராவிட மாடல்' ஆட்சியை - மாட்சியை உலகம் வியக்க நடத்த, "ஒளிபடைத்த கண்ணினாய்" வா, வா! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதேபோல பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராட்டு
இது குறித்து டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினுக்கு தாய்க்கழகத்தின் சார்பில் பாராட்டுக்கள். க.பொன்முடி, ஆ.இராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புதிதாக துணைப் பொதுச்செயலாளராக கவிஞர் கனிமொழி கருணாநிதியை நியமனம் செய்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சி-வரவேற்கத்தக்கதாகும். தொண்டர்களும், தோழர்களும் மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்று வாழ்த்துவதைவிட ஒரு தலைமைக்கும், அதன் ஆற்றல்மிகு அமைப்பினருக்கும் (டீம்) வேறு என்ன பரிசு வேண்டும்!

அறிவுரை
திமுக-வை உருவாக்கிய அறிஞர் அண்ணா - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முப்பெரும் கவசத்தை அதற்கு அளித்தார்! அம்மூன்றில், மற்ற இரண்டுக்கு சற்றுக்கூடுதல் குறைவு ஏற்பட்டாலும்கூட, பொறுத்துக்கொள்ளலாம்; ஆனால், கட்டுப்பாட்டில் சமரசம் துளியும் கூடாது என்ற அறிவுரையை ஆணையாக மொழிந்தார் பெரியார். முத்தமிழ் அறிஞர், இயக்கம் சோதனைக்கு ஆளாகும்போதெல்லாம் தந்தை பெரியாரின் ஒப்பற்ற இந்த அறிவுரையை வழிமொழிந்து வலியுறுத்தி இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கொள்வார்!

பணி
தற்போது ஸ்டாலின் இரண்டாம் முறையாக இப்பொறுப்பில் அமர்த்தப்படும் இன்றைய காலகட்டத்தில், முந்தையத் தலைவர்கள் சந்தித்த அறைகூவல்களைவிட மிக அதிகமானவற்றை எதிர்கொண்டு வென்றெடுக்கவேண்டிய மகத்தான கடமை இவரது தோளில் சுமத்தப்பட்டுள்ளது - நிச்சயம் வென்றெடுப்பார். ஏற்கெனவே பல சோதனைகளால் புடம்போடப்பட்ட கொள்கைத் தங்கம் அவர்! மதவாதம், மக்களாட்சி உரிமைப் பறிப்பு முதலியவற்றின் நச்சுப் பற்களைப் பிடுங்கக்கூடிய பணி நம் முன்னே நிற்கிறது!

கட்டுப்பாடு
நமது முப்பெரும் தலைவர்களின் அறிவுரையை கட்டளையாக்கி, கழகத்தை நடத்தி, வெற்றி வாகை சூடி 'திராவிட மாடல்' ஆட்சியை - மாட்சியை உலகம் வியக்க நடத்த, "ஒளிபடைத்த கண்ணினாய்" வா, வா! என்று மு.க.ஸ்டாலினை அரவணைத்து வரவேற்கிறோம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே மகளிர் பேருந்து குறித்தும், பெண்களுக்கான திட்டம் குறித்தும் அமைச்சர்கள் சிலர் பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது வீரமணி கட்சியின் கட்டுப்பாடு குறித்து பேசியிருப்பது அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications