ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை.. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.. கி வீரமணி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபை கூட்டத் தொடரின் போது தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் ஆரம்பத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை சொன்னாலும் அதன் பிறகு தமிழ்நாடு இருந்த இடத்தில் எல்லாம் திஸ் கவர்மென்ட் என வாசித்தார். அது போல் திராவிட மாடல், அம்பேத்கர், பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர், கருணாநிதி, மத நல்லிணக்கம், சமத்துவம், சமூக நீதி ஆகிய வார்த்தைகளை படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை சமூகவலைதளங்களில் வலியுறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

கி வீரமணி
இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை. ஆளுநரின் செயல்பாடு ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது.

ஆளுநர்
இதுவரை எந்த ஒரு ஆளுநரும் இது போன்ற கீழ்த்தரமான நிலைக்கு சென்றதில்லை. அரசின் உரையை ஆளுநர் வழியாக வெளியிடுவதே வழக்கம்; சொந்த கருத்துக்களை பேச அனுமதி இல்லை. தமிழக சட்டமன்றத்தில் இதுவரை எந்த ஆளுநரும் இப்படி நடந்து கொண்டதில்லை. மக்கள் நலனுக்காக பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆளுநர் மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறார்.

மோதல்போக்கு
திமுக ஆட்சியில் வேண்டும் என்றே மோதல் போக்கை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார். ஆளுநராக செயல்படாமல் ஆர்எஸ்எஸ்காரராக நடந்து கொள்கிறார். ஆளுநர் ரவி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

ஹேஷ்டேக்
தமிழக ஆளுநரை வெளியேற்ற அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து மக்கள் இயக்கத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு கி வீரமணி தெரிவித்துள்ளார். இதனிடையே #Getoutravi என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. அது போல் #MKStalin, #Article365 என்ற ஹேஷ்டேக்குகளும் டிரென்டாகி வருகின்றன.

ஆர்ப்பாட்டம்
தேசிய கீதம் இசைக்கப்படாமல் பாதியிலேயே ஆளுநர் வெளியேறியது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கெனவே நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் சூதாட்ட மசோதா ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக ஆளுநர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வு சட்டசபையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications