சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியும்.. கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்துக்கு சொந்தம்.. ரகுபதி
சென்னை: சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் வாரிசு வழக்கு தொடர்ந்து கச்சத்தீவு எனக்கு தான் சொந்தம் என்று கூறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் அனல் கொதிக்கிறது. தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் இம்முறை நான்குமுனை போட்டி நிலவுகிறது. அனல் பறக்கும் பிரசாரத்தால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக அரசியலில் தற்போது கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது.

கச்சத்தீவு பிரச்சினைக்கு காங்கிரஸ், திமுகதான் காரணம் என்று பாஜக விமர்சித்து வருகிறது. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக, கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்துள்ளது. தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக முதல்வர் முக ஸ்டாலினும் கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:- பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாக தெரிகிறது. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த மோடி கச்ச தீவு குறித்து வாய் திறக்காமல் தற்போது தேர்தலுக்காக வாய் திறந்துள்ளது அவருக்குள்ள நோய் உண்மை என்று காட்டுகிறது.
அண்ணாமலை கூறுவது போல முன்னாள் முதல்வர் கருணாநிதி, கச்சத்தீவை அளிப்பதற்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. கருணாநிதி ராஜதந்திரி. இந்த பிரச்சினையை 2 ஆண்டுகள் ஒத்தி போட முடியுமா என்று தான் கேட்டாரே தவிர ஒரு போதும் விட்டு கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை. கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு தான் சொந்தம்.
அவருடைய வாரிசுகள் இதுவரை எந்தவிதமான சொந்தமும் கொண்டாடவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு வழக்கு தொடர்ந்து, கச்சத்தீவு எனக்கு தான் சொந்தம் என்று கூறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இந்த பிரச்சனை இரு நாட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை. விரைவில் தமிழக அரசு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்ச தீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கச்சத் தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுவதற்கு தான் அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications