செம! வேலூரில் கலைஞர் நூற்றாண்டு ‘ஹாஸ்டல்’ கட்டப்படும்.. அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி அருகே 2 ஏக்கர் பரப்பளவில் 250 படுக்கை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டித் தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை இன்று மருத்துவர்கள், செவிலியர்களுடன் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், முதன்முதலாக ஆட்சிக்கு வந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் நாள் தனது பிறந்தநாளை விளிம்பு நிலை மக்களுக்கான நாளாக மாற்றி அவர்களுக்கான திட்டங்களைத் தொடங்கும் நாட்களாக அதனைக் கொண்டாடியவர் கருணாநிதி.
1971 ஆம் ஆண்டு ஜூன் 3ல் - பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் தொடங்கினார்.
1972 ஆம் ஆண்டு ஜூன் 3ல் - கண்ணொளித் திட்டம் தொடங்கினார்.
1973 ஆம் ஆண்டு ஜூன் 3ல் - கை ரிக்ஷாவுக்கு பதிலாக இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.
நாட்டிற்கே முன்மாதிரியான, ஏழை எளிய மக்களுக்கான 'முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்' கலைஞரால் உருவாக்கப்பட்டது.
கருணாநிதி ஆட்சி காலத்தில் விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற சிந்தனையை முதன்முதலாக விதைத்தவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்.
நான்கு குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவள், அதில் எந்தக் குழந்தை மெலிந்து இருக்கிறதோ அந்தக் குழந்தையையே அதிகம் கவனிப்பாள். அப்படி மெலிந்த குழந்தைகளைக் காக்கும் அரசு எமது அரசு' என்று கருணாநிதி சொல்வார். அத்தகைய அரசு தான் இன்றைய திராவிட மாடல் அரசு.
இன்று உருவாக்கப்படும் மருத்துவமனையாக இருந்தாலும் - அடுத்த மாதம் திறக்கப்படும் நூலகமாக இருந்தாலும் இத்தகைய தாயுள்ளம் கொண்ட கருணாநிதியின் பேரால் அமைவதே பொறுத்தமானது. இதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பு என்பது என் வாழ்நாளில் கிடைத்த மாபெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன்.

வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர். இப்படி வருபவர்கள் தங்குவதற்குக் குறைந்த கட்டணத்தில் அறைகள் கிடைப்பதில்லை. இதுபற்றி தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பயன்பெறும் வகையில் வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி அருகே பெருமுகை கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் 250 படுக்கை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டித் தரப்படும்" என அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications