மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. இன்றே வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைத்த அரசு.. காரணம் என்ன?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கு முன்னோட்டமாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நல்ல காரியம் செய்யும் போது நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மகளிரின் அபரிமிதமான ஆதரவோடு தமிழகத்தில் ஆட்சியமைத்தது திமுக.

நிதிநிலையை காரணம் காட்டி இதுவரை மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் வங்கிகள் மூலம் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் அனுப்பப்பட உள்ளது. மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர். திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதனையடுத்து பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும். ஏடிஎம் கார்ட் பயன்படுத்தி 1000 ரூபாய் பணத்தை பெண்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கோடிக்கும் மேல் பயனாளிகள் உள்ளதால் ஒரே நாளில் பணம் வரவு வைக்க முடியாது என்பதால் இன்றைய தினமே பணத்தை வரவு வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாளைய தினம் பிரதமை என்பதால் சர்வ அமாவாசை தினமான இன்று ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள வங்கி எண்ணுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளிருந்து கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளர்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பப்பட்டு குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டுவதாலும் , அதிக அளவிலான நிதிப் பரிவர்த்தனை நடைபெற உள்ளதாலும் நிதித்துறை அறிவுறுத்தல்படி முன்கூட்டியே பணம் அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளர்களுக்கான நிதி பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வாயிலாக அனுப்பப்பட உள்ளதாக நிதித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
நாளைய தினம் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் படிப்படியாக பணம் வரவு வைக்கப்படும் வரும் 18ஆம் தேதி வரை பணம் வரவு வைக்கப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications