சென்னை கிண்டியில் "கலைஞர் 100" விழா.. ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்பு
சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் 'கலைஞர் 100' விழா நடைபெற்று வருகிறது. திரையுலகத்தில் இருந்து பெரும் பட்டாளமே இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னையில் பெருமழை பெய்தது.

இதனால், கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டு சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. இடன் காரணமாக கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 6 ஆம் தேதி கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்த விழா நடைபெறும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயாராகி வந்தன.
இந்த நிலையில், திட்டமிட்டபடி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 5 மணி அளவில் 'கலைஞர் 100' நிகழ்வு தொடங்கியது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அதே போல கமல், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதே போல, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான், டி.ராஜேந்திரன், ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ஆந்திர அமைச்சர் மீனாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications