கலைஞர் மகளிர் உரிமை தொகை.. வெப்சைட்டை ஓபன் பண்ணி பார்த்தால்... காத்திருந்த ட்விஸ்ட்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு தொலைப்பேசி எண் 1100 என்ற எண்ணும் வேலை செய்யவில்லை, இதேபோல் அரசு தொடங்கி வைத்த இணையதளமும் இன்னும் வேலை செய்யவில்லை. இதனால் மக்கள் பலர் எப்படி விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் 14ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் சுமார் 1.06 கோடி மகளிருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 57 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் https://kmut.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப நிலையை அறியலாம் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி பலரும் இணையதளத்தை திறக்க முயன்றனர்.ஆனால் இணையதளம் வேலை செய்யவில்லை. அப்படியே உள்ளே சென்றாலும் விண்ப்ப நிலையை அறியும் இடத்தில் ஓடிபி பகுதி இன்னமும் வேலை செய்யவில்லை.
உள்ளே சென்றாலும் விண்ணப்ப நிலையை அறிய முடியவில்லை என்று பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள். அதேபோல் மகளிர் உரிமை தொகை குறித்து அறிய சிறப்பு உதவி எண் 1100 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் அந்த உதவி எண்ணும் வேலை செய்யவில்லை.
எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே எஸ்எம்எஸ் வந்தும் பணம்வராத பலரும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இதேபோல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள். விரைவில் இணையதளம் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் குறித்து இசேவை மையம் அல்லது கோட்டாட்சியர் அலுவலகம் சென்றே நிலையை தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருக்கிறது. இதேபோல் சந்தேகங்கள் அறிய அறிவிக்கப்பட்ட அரசின் தொலைப்பேசி எண், விரைவில் வேலை செய்ய வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications