கள்ளக்குறிச்சியை உலுக்கிய சடையன், வேலு, கவுதம் ஜெயின் .. மூவரின் ஜாமீன் 2வது முறையாக தள்ளுபடி
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவத்தில், கைதான மூவரின் ஜாமீன் மனுக்களை இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 24 பேரில் சடையன், கவுதம் மற்றும் ஜெயின் ஆகிய மூவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். சிபிசிஐடி விசாரணை நடந்துவருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகரத்தை ஒட்டிய கருணாபுரம், மாடூர், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 229 பேர், கடந்த ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டார்கள். இவர்களில் 70 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் விற்பனை செய்தது, மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 24 பேரை கைது செய்துள்ளனர். இவர்களை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகிய மூன்று பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்தனர் இந்த மனுவிற்கு எதிராக சி.பி.சி.ஐ .டி போலீசார் சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, வேலு மற்றும் கௌதம் ஜெயின் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கடந்த செப்டம்பர் 23ம் தேதி வாதிட்டார்.
கள்ளக்குறிச்சி சாராய சம்பவத்தில் தொடர்புடைய 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் முழுவீச்சில் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் எனவே ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தனபால் மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக அவர்கள் தாக்கல் செய்த மனு, நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடைபெற்று வருவதால், ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications