கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! வழக்கை விரைவாக விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.

மீண்டும் விசாரணை
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி மூன்று அறிக்கைகளைச் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்தார்.

நடவடிக்கை
பள்ளி கலவரம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த அறிக்கையில், மாணவி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 53 யூ டியூப் லிங்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 7 ட்விட்டர் பக்கங்களும், 21 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்பியதாக மூன்று வாட்ஸ் ஆப் குரூப்க்களின் அட்மின்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோரிக்கை
கலவரம் தொடர்பாக 63 போலீசார் உள்பட 202 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர சுப்பு, ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆட்சேபம்
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், நேற்று முன்தினம் மாணவியின் தாய் முதலமைச்சரைச் சந்தித்து முறையீடு செய்தார். அதைக் கேட்ட முதலமைச்சர், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் மனுதாரர் தெரிவிக்கும் அச்சம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

பாராட்டு
ஜிப்மர் ஆய்வறிக்கை மற்றும் விசாரணை நிலை குறித்து அறிக்கை மனுதாரர் தரப்புக்கு வழங்க மறுத்த நீதிபதி, மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மருத்துவக் குழுக்கள் நியமித்த அரசுக்குப் பாராட்டு தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் மூலம் வதந்தி பரப்புவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவு
மேலும், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையைச் செப்டம்பர் 27ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். பள்ளி நிர்வாகம் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாகக் கூறி வரும் நிலையில், அதை மறுத்துள்ள பெற்றோர் தங்கள் பிள்ளை கொலை செய்யப்பட்டுள்ளதாகவே தொடர்ந்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications