மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர்கள் நியமனம்! செம டீம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர் தேர்வுக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில் பழ கருப்பையா, பொன் ராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை தந்துள்ளனர்.
அந்த வகையில் விருப்ப மனுக்கள் குறித்து பேச மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்து அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. தகுதிசால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க என்னுடைய தலைமையிலான வேட்பாளர் தேர்வுக் குழு வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணலில் ஈடுபடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர் தேர்வுக் குழுவினை அறிவிக்கிறேன்.
தலைவர்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
பழ கருப்பையா, மூத்த அரசியலாளர்
பொன்ராஜ், அப்துல் கலாமின் ஆலோசகர்
ஆர் ரங்கராஜன் ஐஏஎஸ் (ஓய்வு)
செந்தில் ஆறுமுகம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்
சுரேஷ் ஐயர், தேர்தல் பிரச்சார வியூக அலுவலகம்
வெற்றி நமதே
என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.