அன்று டிவியை உடைத்த கமல்ஹாசன்.. இன்று அப்படியே மாறிட்டாரே.. அரசியலில் சாதாரணம் என்பது இதுதானா?
சென்னை: 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் டிவியை உடைத்தார்... அன்று திமுக, அதிமுக, பாஜகவிற்கு மாற்று என்பதை குறிக்கும் வகையில் அப்படி நடந்து கொண்ட கமல்...இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது..
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018ல் தொடங்கப்பட்ட நிலையில் வெறும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக தேசியப் பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டிவியில் பார்ப்பதை போலவும், இதனால் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போலவும், மக்கள் நீதி மய்யம் ஒரு தேர்தல் விளம்பரத்தை கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது.

இந்த விளம்பரம் அன்றைக்கு கமல் முதல் முறையாக அரசியலில் குதித்த காரணத்தால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேநேரம் அப்போது பிற கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து, கமல்ஹாசன் தேர்தல் விதிமுறைகளை மீறி அந்த விளம்பரத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக பிற கட்சியினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கமல்ஹாசன் விளம்பரத்தில் மாற்றங்களை செய்தது. பீப் ஒலி ஒலிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை மாற்றியது. அதை மீண்டும் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அந்த தேர்தலில் 5 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், 3.71 விழுக்காடு வாக்குகளையும் பெற்று மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. இதனால் 2021 சட்டசபை தேர்தலில் அதிகமான வாக்குகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப் பேரவைத் தேர்தலில், 2.45 விழுக்காடு வாக்குகளே மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்தது,
தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2021 சட்டசபை தேர்தலில் 154 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி தலா 40 இடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி தலா 40 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட கமல்ஹாசனின் கட்சி வெற்றிபெற முடியவில்லை.. 2019-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை விட 1.26 விழுக்காடு குறைவான வாக்குகளே அக்கட்சிக்கு கிடைத்தது. 2019 லோக்சபா தேர்தலில் 15 லட்சத்து 75 ஆயிரத்து 324 பேர் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 847 பேர் மட்டுமே வாக்களித்தார்கள்.
திமுக, அதிமுகவிற்கு மாற்றாக அரசியலில் களம் காண முயன்ற கமல்ஹாசன் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவியதால், அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் 2021ம் ஆண்டு வேறு கட்சிக்கு தாவினார்கள். முன்னணி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்த போது, கமல்ஹாசன் அமைதியாகவே இருந்தார். தீவிர அரசியலில் இருந்து பகுதி நேர அரசியல்வாதியாக மாறினார். விக்ரம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடிக்க தொடங்கிய கமல்ஹாசன், சினிமாவில் தான் உச்ச நட்சத்திரம் தான் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்தினார்..
கமல்ஹாசன் 2021 தேர்தலில் தோற்க முக்கிய காரணம் அவரை பாஜகவின் பி இடம் என்று பலரும் அழைத்தது தான் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் 2024 தேர்தலில் பாஜகவின் பி டீம் என்று விமர்சித்த கட்சிகளுடன் கமல் கூட்டணி சேர்ந்துள்ளார். அன்று டிவியை உடைத்து ஆக்ரோஷம் காட்டிய கமல், தனித்து போட்டியிட்டு தோல்விகளை தழுவியதால், கூட்டணி அரசியல் என்ற பாதைக்குள் திரும்பி உள்ளார்.
திமுக, அதிமுகவிற்கு மாற்றாக அரசியலில் தனித்து களம் கண்டு, ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் மனம் மாறாத நிலையில், பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் தள்ளப்படுகின்றன. அந்த வரிசையில் கமல்ஹாசனும் அவரது மக்கள் நீதி மய்யமும் இன்று இணைந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா தொகுதி திமுக கூட்டணியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை லோக்சபா தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடவில்லை.. திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறது.












Click it and Unblock the Notifications