கமல்ஹாசனின் "விஸ்வரூபம்".. 234 தொகுதியிலும் விழுந்த "ராஜபார்வை".. மலைத்து பார்க்கும் தமிழக கட்சிகள்
சென்னை: படப்பிடிப்பு, பிக்பாஸ் என பரபரப்பு பணிகளுக்கு நடுவில், அரசியல் குதிரையின் வேகத்தையும் தட்டிவிட்டுள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. கடந்த முறை எம்பி தேர்தலை போலவே, இந்த முறையும், மக்கள் நீதி மய்யம், ஜரூர் வேகத்தில் களமிறங்க தயாராகிவருகிறது.
வாக்குகள்: குட்டி குட்டி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2019 எம்பி தேர்தலை சந்தித்து, 3.78 சதவீத வாக்குகளை பெற்று, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் கமல்.. தமிழகத்தில் இப்படி கலக்கிய அதேசமயத்தில்தான், அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சரத்குமாருடன் கூட்டணி வைத்து, போட்டியிட்டது. ஆனால், மய்யம் சரிவை நோக்கி போய்விட்டது... வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்துவிட்டது.. மய்யத்திலிருந்த முக்கிய நிர்வாகிகளும், வேறு வேறு கட்சிகளுக்கு பறந்துபோய்விட்டனர்..
மீண்டும் எழுச்சி: அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், நிர்வாகிகளின் கட்சி தாவல்கள், போன்றவற்றால் சோர்ந்து போயிருந்த நிலையில், மீண்டும் பீனிக்ஸ் பறவையாக கிளம்பி உள்ளார் கமல்ஹாசன்.. ராகுல் காந்தியின் யாத்திரைக்கு நேரடியாகவே சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், உதயநிதியிடம் நெருக்கம் காட்டிட நிலையில், எப்படியும் இந்த முறை திமுக கூட்டணியில் மய்யம் இடம்பெறப்போகிறதோ என்ற சலசலப்பு ஓடி கொண்டிருக்கிறது..
அதேபோல, பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டதால், அதிமுகவுடன் மய்யம் கூட்டணி வைக்குமோ என்ற முணுமுணுப்பும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை கமல் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எந்த தொகுதி: கோவை, தென்சென்னை, ராமநாதபுரம் என ஏதாவது ஒரு தொகுதியில் கமல் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், எங்கு போட்டியிட்டாலும், பாஜகவின் எதிர்ப்புகளை, கமல் வெகுவாரியாக அள்ளுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கட்சியை பலப்படுத்தும் வேலைகளை கடந்த சில மாதங்களாகவே முடுக்கி விட்டுள்ளார்.. புதுபுது வியூகங்களை வகுத்து, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியும் வருகிறார். இன்றுகூட, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் தொழிற்சங்கமும், மய்யம் திருப்பூர் பனியன் தொழிற்சங்கமும், நம்மவர் தொழிற்சங்கப்பேரவையில் இணைந்தது.
கமல் வேண்டுகோள்: கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, "மக்கள் நீதி மையத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவையை வலுப்படுத்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் அனைத்து இடங்களிலும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் நம்மவர் தொழிற்சங்கங்களை தொடங்கி கட்சியை பலப்படுத்துங்கள். எம்பி தேர்தல் வருவதால், அடுத்த 6 மாதத்துக்குள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும்" என்று பேசியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்றால் ஒரு சீட் தர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதானால், 1+1 சீட்டுகளுடன், தேர்தல் செலவையும் அதிமுகவே ஏற்றுக்கொள்ளும் என்ற உத்தரவாதமும் தரக்கூடும் என தெரிகிறது.
ஆனால், இதுவரை யாருடன் கூட்டணி என்பதை கமல் இன்னமும் அறிவிக்கவில்லை என்றாலும், 234 தொகுதிகளிலும் கமலின் கவனம் தற்போது விழுந்துள்ளது, முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications