துரோகிகள்.. கோபத்தின் உச்சியில் கமல்ஹாசன்.. திடீரென "எக்சிட்" ஆன மகேந்திரன்.. மநீமவில் நடந்தது என்ன?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் பல பரபரப்பு சம்பவங்கள், திருப்பங்கள் நடந்துவிட்டன.. கட்சியின் இரண்டாவது பெரிய தலைவராக கருதப்பட்ட மகேந்திரன் கட்சியில் இருந்தே வெளியேறி உள்ளார். இன்னொரு பக்கம் மகேந்திரன் மீது மநீம தலைவர் கமல்ஹாசன் புகார்களை வைத்துள்ளார்... மநீம கட்சியில் என்னதான் நடக்கிறது?
Recommended Video
மக்கள் நீதி மதியம் கட்சி 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் பல தொகுதிகளில் நன்றாகவே வாக்குகளை பெற்று இருந்தது. முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் திமுக, அதிமுக இடையே வெற்றியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நீதி மய்யம் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் முடிந்த பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி உள்ளனர். நேற்று மாலை வரிசையாக பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.

வெளியேற்றம்
அதன்படி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ், மற்ற சி.கே.குமரவேல், மௌரியா,பொறுப்பாளர்கள், சந்தோஷ்பாபு, முருகானந்தம் ஆகியோர் வெளியேறி உள்ளனர். இது தொடர்பாக பேசிய மருத்துவர் மகேந்திரன், கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதனால் வெளியேறுகிறோம்.

காத்திருப்பு
கடந்த ஒன்றரை வருடமாகவே கட்சியில் ஜனநாயகம் இல்லை.தேர்தல் முடிவிற்கு பின் கமல்ஹாசன் மாறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மாறவில்லை. தேர்தல் முடியும் வரை, கட்சி தொண்டர்களுக்காக காத்திருந்தேன்.

வெளியேற்றம்
இப்போதும் கமல்ஹாசன் மாறவில்லை என்று தெரிந்ததால் தற்போது வெளியேறுகிறேன். கமல்ஹாசனுடன் எப்போதும் போல நண்பராக தொடர்வேன், கட்சியில் நீடிக்க மாட்டேன், என்று மகேந்திரன் குறிப்பிட்டு இருந்தார். மகேந்திரன் இப்படி நண்பராக தொடர்வேன் என்று கூறிய நிலையில், அவரை துரோகி என்று கமல்ஹாசன் கடுமையாக கோபமாக விமர்சித்துள்ளார்.

கமல் அறிக்கை
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.
களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். 'துரோகிகளைக் களையெடுங்கள்' என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன்.

ஜனநாயகம்
கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ள துணிந்தார்.
கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு 'அனுதாபம்' தேட முயற்சிக்கிறார்.

விலகல்
தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர, சகோதரிகள்மனம் தளரவேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின் போது கூடாரத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை, என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

என்ன நடக்கிறது
இப்படி கட்சியின் தலைவருக்கும், முன்னாள் தலைவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மநீமவில் என்ன நடக்கிறது என்று கட்சிக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தோம். அதில், மகேந்திரனை கட்சியை விட்டு முன்பே நீக்கும் திட்டம் என்று கமல்ஹாசனுக்கு இருந்ததாக கூறுகிறார்கள். அதாவது மகேந்திரனின் சில நடவடிக்கைகள் கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மனஸ்தாபம்
கட்சியில் மற்ற நிர்வாகிகள் வளர்வதை மகேந்திரன் தடுப்பதாக கமலுக்கு புகார்கள் சென்றதாக கூறுகிறார்கள். அதோடு மகேந்திரனின் தேர்தல் பணிகளில் கமலுக்கு திருப்தி இல்லை என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் இருந்தது. இதுதான் பிரச்னைக்கு காரணம்.

தேர்தல்
இன்னொரு பக்கம் கமல்ஹாசன் மீது மகேந்திரன் அதிருப்தியில் இருந்தார் என்கிறார்கள். அதிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் மீது மகேந்திரன் அதிருப்தியில் இருந்தார், மற்ற இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரத்தை குறைவாக செய்ததாக மகேந்திரன் வருந்தியதாக கூறுகிறார்கள். கமல் மட்டுமே தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக மகேந்திரன் கோபத்தில் இருந்தார் என்கிறார்கள்.

கமல்
இதனால்தான் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று மகேந்திரனும், திறமை இல்லாத துரோகி என்று மகேந்திரனை கமலும் விமர்சிக்க காரணம் என்கிறார்கள். இரண்டு பேருக்கும் இடையில் நேரடி மோதல் எல்லாம் இல்லை. மனஸ்தாபம்தான், பேசி இருந்தால் சரி ஆகி இருக்கும்.. ஆனால் இரண்டு பேருமே பேச விரும்பவில்லை, அதனால் தான் கட்சியில் இருந்து மகேந்திரன் இப்போது வெளியேறி உள்ளார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications