“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன்
சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இப்படி இருக்கையில், "பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "'சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது... இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்... அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்... காரி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்.'

சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை" என பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக தமிழகத்தின் குற்ற நிலவரம் குறித்து, தலைமை செயலாளர் தீரஜ் குமார் விளக்கமளித்திருந்தார். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அதில், தமிழகத்தில் அனைத்துவிதமான குற்றங்களும் தமிழ்நாட்டில் பெருமளவு குறைந்திருப்பதாகவும், ஆதாய கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காவல் நிலைய மரணங்கள் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல சிவகங்கையில் நடைபெற்ற காவல் நிலைய மரணம் குறித்தும் விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications