20 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டி.. 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் கருத்து இதுதான்
Recommended Video
சென்னை: 20 தொகுதிககளிலும், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டும் முடிவுக்கு 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் கணிசமாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருவாரூர், திருப்பரங்குன்றம், தகுதி நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் சூழல் உள்ளது.
[20 தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன் அறிவிப்பு]
தனித்து போட்டி?
இந்த நிலையில், 20 தொகுதிகளிலும் போட்டியிட நாங்க தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காத நிலையில், தனித்து போட்டியிட்டு 20 தொகுதிகளையும் வெல்ல முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து நமது 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட, கருத்துக் கணிப்பில் சுவாரசிய கருத்துக்கள் பதிவாகியுள்ளன.
ஜெயிப்பார்கள்
நிச்சயம் ஜெயிப்பார்கள், என்று, 11.15 சதவீதம் பேர், பதிலளித்துள்ளனர். தனித்து போட்டியிட்டாலும் மக்கள் நீதி மய்யம் மக்கள் ஆதரவை பெறும் அதுவும் கூட இடைத் தேர்தலில் புதிதாக துவங்கப்பட்ட ஒரு கட்சியால் வெற்றிபெற முடியும் என்று, இவர்கள் கருதுவதை வைத்து பார்க்கும்போது கட்சி மீது வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கை தெரிகிறது.
பெரும் தோல்வி
அதேநேரம், பெரும் தோல்வி உறுதி என்ற பதிலுக்கு அதிகப்படியான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். 35.08 சதவீதம் பேர் இவ்வாறு வாக்களித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி நிலைமையை அறிந்தோ அல்லது தமிழக நிலைமையை தெரிந்தோ இதுபோல இவர்கள் கருத்து கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.
திமுகவுடன் கூட்டணி
திமுகவுடன் கூட்டணி வைக்கலாம், என்ற பதிலுக்கு 15.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். தனித்து வெல்ல முடியும் என்று கூறியவர்களைவிட இது சற்று கூடுதல் என்றாலும், கணிசமானோரே இதற்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. திமுகவுடன் கமல் கட்சி கூட்டணி அமைப்பது பெரும்பான்மையானோருக்கு பிடிக்கவில்லையா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
சபாஷ் சொல்கிறார்கள்
சபாஷ் சரியான முடிவு என்ற பதிலுக்கு 25.74 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தேர்தலை சந்திக்க கமல் கட்சி தயாராக இருப்பதற்குதான் இவர்கள் சபாஷ் சொல்கிறார்கள் என எடுத்துக்கொள்ள முடியும். மற்ற கட்சிகள் சீர்குலைக்க முயல்வார்கள், என்ற ஆப்ஷனுக்கு, 12.13 சதவீதம் பேர், ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர்.