Exit Poll 2021: 3 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி.. சட்டசபையில் காலடி வைக்கும் "நம்மவர்"களில் ஓரிருவர்!
சென்னை: தொடங்கிய 3 ஆண்டுகளில் கமல்ஹாசன் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் சட்டசபைத் தேர்தலில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
உலகநாயகன் கமல்ஹாசன், பன்முகத் திறமை கொண்ட இவர் சினிமாத் துறையில் "தசாவதாரம்" எடுத்த கையுடன் மற்றொரு துறையான அரசியலுக்கும் வந்துவிட்டார். 2018ஆம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் கமல்ஹாசன்.
இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். மதுரையில் இந்த கட்சியை தொடங்கிய நிலையில் அவரது கட்சி 2019-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தொகுதிகளில் விசிட் அடித்தது. நாடாளுமன்றத் தொகுதிகளில் பொதுவாக கொங்கு தொகுதிகளில் கமல்ஹாசனே நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கமல் கட்சி
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அடித்தளமாக நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். சட்டசபைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவையுடன் கமல் கட்சி கூட்டணி வைத்தது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் இவரே!

பிரச்சாரம்
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பெரும்பாலான சட்டசபைத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் கமல்ஹாசன். தொழில் வளர்ச்சி பெற்றால் தமிழகத்தின் பொருளாதாரத்தின் நிலை உயரும் என்பதால் கொங்கு மண்டலத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

கோவை தெற்கு தொகுதி
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

நல்ல மகசூல்
அதில் ஏபிபி சி வோட்டர், ரிபப்ளிக், இந்தியா அஹெட் ஆகியவை மக்கள் நீதி மய்யம் கட்சி ஓரிடத்திலாவது வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு இடம் என்றாலும் மிகவும் குறைந்த காலத்தில் கமல் கட்சி
அறுவடை செய்ய போகும் நல்ல மகசூலாகும்.

சந்தேகமே இல்லை
கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில் ஓரிடத்தில் வெற்றி என்பது சாதாரண விஷயமல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் குரல் கொடுத்தால் இனி அடுத்தடுத்த தேர்தல்களில் கமல்ஹாசனின் கட்சி நிச்சயம் கணிசமான இடங்களை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications