தென்னிந்தியர்கள் இல்லாமல் இந்திய சரித்திரம் கிடையாது.. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.. கமல்
சென்னை: 12000 வருடப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி என்றும் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியுள்ளார்.
கடந்த 12000 வருட இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய மத்திய அரசால் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தென்னிந்தியரோ, சிறுபான்மையினரோ, ஒடுக்கப்பட்டவர்களோ இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் ராஜாங்க அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் அண்மையில் நடாளுமன்றத்தில் எழுத்து மூலம் இந்த பதிலை அளித்திருந்தார். அப்போது அவர் கூறும் போது, தற்காலத்திலிருந்து 12,000 வருடங்களுக்கு முன்பு வரையிலான இந்தியக் கலாசாரம் குறித்தும் அதன் துவக்கம் குறித்தும் ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
16 பேரைக் கொண்ட அந்த நிபுணர் குழுவில், இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல்கள் கே.என். தீக்ஷித், ஆர்.எஸ். பிஷ்ட், தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல்கள் பி.ஆர். மாணி, ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, லால் பகதூர் சாஸ்திரி, டெல்லி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் தலைவர் பி.சி. சர்மா, ஹைதராபாத் பல்கலைக்கழக மானுடவியல் துறையின் டீன் கே.கே. மிஸ்ரா, டெல்லி பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறையைச் சேர்ந்த பல்ராம் சுக்லா, கனடாவைச் சேர்ந்த ஆசாத் கௌசிக், உலக பிராமணர் ஃபெடரேஷனின் தலைவர் எம்.ஆர். ஷர்மா, தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழக துணை வேந்தர் ரமேஷ் குமார் பாண்டே, டெல்லி பல்கலைக்கழகத்தின் வேந்தர் முகுந்த்கம் ஷர்மா, விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மக்கன்லால், இந்தியப் புவியியல் சர்வேயின் முன்னாள் கூடுதல் இயக்குனர் ஜெனரல், ஜி.என். ஸ்ரீவத்ஸவா, தேசிய சமஸ்கிருத சன்ஸ்தானின் துணை வேந்தர் பி.என். சாஸ்திரி, கலாசாரத் துறையின் பிரதிநிதி, ஆர்க்கியாலஜிகல் சர்வேயின் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவில் தென்னிந்தியர்கள் ஒருவரும் இடம் பெறவில்லை. இதேபோல் வடகிழக்கு மாநிலத்தவர்களோ அல்லது சிறுபான்மையினரோ, பெண்களோ இடம் பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்பி கனிமொழி அண்மையில் தனது ட்விட்டரில் இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை ? சிறுபான்மையினரோ, தலித்துகளோ, இந்திய கலாச்சாரம் குறித்து பேசக்கூடாதா ? அல்லது அவர்கள் தகுதியற்றவர்களா ? என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "பழமையும், பன்முகத்தன்மையும் இந்தியக் கலாச்சாரத்தின் அடிநாதம். 12000 வருடப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி. தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இன்றி இந்திய சரித்திரம் கிடையாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications