ஊழலை ஒழிக்க கட்சி தொடங்கிய கமல்.. சொந்த கட்சியிலேயே பணத்தாசை பிடித்த நிர்வாகிகள்.. கடும் வார்னிங்!
சென்னை: நேர்மையான அரசியல் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே என் கட்சியில் இருக்க முடியும் என கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதற்கு காரணமே மக்களுக்கு நேர்மையான ஆட்சியை நல்லாட்சியை மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் என கமல் அடிக்கடி கூறுவதுண்டு.
பணம், புகழ் எல்லாவற்றையும் அவருக்கு சினிமாத் துறையிலேயே மக்களாகிய நீங்க கொடுத்து விட்டீர்கள். இதற்கு பிறகு அவையெல்லாம் எனக்கு எதற்கு? என்னால் முடிந்த நன்மையை மக்களுக்கு செய்ய விரும்புகிறேன் என்பது அவ்வப்போது கமல்ஹாசன் கூறுவதுதான்.
பணம் சம்பாதிக்கும்
இந்த நிலையில் இத்தனை நாட்களாக சாதுவாக இருந்த கமல்ஹாசனை அவரது நிர்வாகிகளே தற்போது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற அளவுக்கு செல்ல வைத்துவிட்டதாக கூறுகிறார்கள். இவரது கட்சியில் உள்ள சில மாவட்ட நிர்வாகிகள் உள்ளே இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கிறார்களாம்.
பேரம்
அது போல் வெளி கட்சிகளுக்கும் பேரம் பேசுகிறார்களாம். இது அவ்வப்போது ஆண்டவரின் காதுகளை சென்றடைந்தது. இதையடுத்து அது போன்ற நபர்கள் தனக்கு வேண்டாம் என ரஜினி ஸ்டைலில் கமல்ஹாசனும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இப்போது ஓடி போயிருங்க என ரஜினி 2017ஆம் ஆண்டு மன்றத்தினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எச்சரிக்கை
அது போல் கமல்ஹாசனும் நேர்மையான அரசியல் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே என் கட்சியில் இருக்க முடியும். மற்றவர்கள் அவர்களாகவே விலகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகளை இத்துடன் ஏறக்கட்ட வேண்டும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.
களை எடுக்கும் கமல்
இது குறிப்பாக திருச்சி மாவட்ட மநீம பிரிவினருக்கு என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் அவரது பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ள என்னவெல்லமோ செய்கிறாராம். ஊழலை ஒழிக்க கட்சி தொடங்கிய கமல்ஹாசன் தற்போது தன்னுடைய கட்சியிலிருந்தே களை பறிக்கத் தொடங்கிவிட்டாராம்.