ஒவ்வொரு வீட்டிலும் மய்யம் கொடி.. கிராமங்களை நோக்கி செல்லுங்கள்.. கட்சியினருக்கு கமல்ஹாசன் கடிதம்!
மநீம 6ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியினருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: மக்கள் நீதி மய்யம் கொடியை நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தங்கள் இல்லங்களிலும் கொடி ஏற்றி நம் கட்சியின் 6ம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
5 தலைமுறைகளை கடந்தும் முன்னணி நடிகராக வலம் வருகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக் குறிப்பிடத்தக்குந்த வாக்குகளை பெற்றிருந்தாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி சந்தித்தது. சில தொகுதிகளில் கௌரவமான வாக்குகளை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.

கமல்ஹாசனின் அரசியல்
இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதன்பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் கமல்ஹாசன் விக்ரம், பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். அதேபோல் விக்ரம் படம் மூலம் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வந்தார். இருப்பினும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல், ட்விட்டரோடு நின்றுபோனது.

திமுக கூட்டணியில் மநீம
இதனிடையே ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டது, மீண்டும் கமல்ஹாசன் மீது கவனம் குவியத் தொடங்கியது. இதனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், விரைவில் திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரடியாக கமல்ஹாசனிடம் ஆதரவு கோரினார். பின்னர் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த கமல்ஹாசன், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கமல்ஹாசன் கடிதம்
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு, இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 6ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், கட்சித் தொடர்களுக்கு கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பிப்ரவரி 21ம் தேதி நம் கட்சியின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக, கட்சி வளர்ச்சிப் பணியாற்ற கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும். கட்சியினர் அனைவரும் மக்கள் நீதி மய்யம் கொடியை பிப்.21ம் தேதி நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும்.

வீடுகளில் மய்யம் கொடி
அழகான வெண் மேகக்கூட்டங்கள் போல, நம் மய்யக் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும். நம் கட்சி, நம் கொடி என்ற உணர்வோடு மக்கள் நிதி மய்யத்தினர் அனைவரும் தங்கள் பகுதியில் மாற்று கட்சியினர் கொடிகளைவிட அதிகமான இடங்களில் நம் கொடியை பறக்க விடுவதோடு தங்கள் இல்லங்களிலும் கொடி ஏற்றி நம் கட்சியின் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications