Newsmakers 2018: தமிழக மக்களிடையே "மய்யம்" கொண்ட புதுமைப் புயல்.. கமல்!
2018-ல் உருவான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சி
சென்னை: பிப்ரவரி 22 - அன்று "மக்கள் நீதி மய்யம்" என்ற கட்சியை தொடங்கினார் கமல்ஹாசன்.
வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல இது இல்லை என்பது பெயரை கேட்டவுடனே தெரிந்து விட்டது. இந்த பெயரை கமல்தான் வைத்தார். கட்சியின் கொடி கூட ஏதோ ஒன்றை வித்தியாசமாக சொல்வதைப் போலவே இருந்தது. கட்சி தொடங்கிய அன்று அதற்கான அறிமுக கூட்டமே வித்தியாசமாக நடந்தது.
இடதுசாரி இயக்கங்களைப் போல உயர்நிலை குழு ஒன்றை அமைத்து, அதேமேடையில் அகில இந்திய பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர்களையும் கமல்ஹாசன் நியமித்ததை பலரும் வியப்புடன் பார்த்தார்கள்.
பிரகடனம்
கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னமேயே ட்விட்டரில் தன் அரசியலை முன்னெடுத்தார் கமல். அதில் ஆளும் தரப்பினரே அதிகமாக வறுபட்டு போனார்கள். பிறகுதான் கட்சியை ஆரம்பித்து கொள்கைகளையும் கமல் பிரகடனப்படுத்தினார்.
களம் புறப்பட்ட கமல்
உண்மையிலேயே கமலின் இந்த கட்சி ஒரு வித்தியாசமான கட்சி. கிராமிய அரசியலை முன்னெடுத்து செல்லும் கட்சி. கிராம பஞ்சாயத்தையும், விவசாயத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்க தொடங்கிய கட்சி. நாம் மறந்து போன, மறக்கடிக்கப்பட்ட கிராம நிர்வாக சபை என்ற 25 வருடங்களாக புதைந்து போன ஒரு விஷயத்தை மீண்டும் தோண்டி எடுத்து மக்களிடம் தர களம் புறப்பட்டார். இதற்காக மாதிரி கிராம நிர்வாக சபை கூட்டத்திலும் கமல் பங்கெடுத்தார்.
மக்கள் பிரச்சனைகள்
இளைஞர்கள் கேட்காத, அல்லது கேட்டும் மறந்த ஒரு வார்த்தை கிராம நிர்வாகம் என்பது. இதை இப்போது பெரும்பாலான இளைஞர்கள் உச்சரிக்கிறார்கள் என்றால் அதற்கு கமல்தான் காரணம். மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், தற்போது மக்கள் பிரச்சனைகளை தானாக முன்வந்து களைந்து கொண்டு இருக்கிறார்கள்.
தக்க பதிலடி
கட்சி தொடங்கிய நாளிலிருந்து கமல் கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஊழலுக்கு எதிரான ஒரு அரசியலைதான். இதற்காக ஆளும் அரசியல் கட்சி தலைவர்களை நேருக்கு நேராக நின்று கேள்விகளை எழுப்பியும், அவர்களின் பதிலுக்கு தக்க பதிலடி தந்தும் வருகிறார் கமல்.
முக்கிய காரணி
தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் வரப்போகும் தேர்தலுக்கும் தயார் ஆகி வருகிறது. இதற்காக கூட்டணி என்ற முடிவையும் கையில் எடுத்து உள்ளது. அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கமல் நேரடியாக பலமுறை சென்று சந்தித்து அவரது தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியமான காரணியாகவே அமைய போவதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
கமலின் வெற்றி
எனினும் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் கூட முழுசா ஆகாத நிலையில், மக்கள் நீதிமய்யம் இந்த ஆண்டில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதே கமலின் வெற்றி என்று கூட சொல்லலாம்.