சொந்த ஊரான ராமநாதபுரத்தில் கமல் போட்டி? மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அழுத்தம்
Recommended Video
சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் தொகுதியில் நிற்க திட்டமிட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கமலஹாசன் தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்ட மண்ணில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து 21.02.2018ல் அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தீவிரமாக களம் இறங்கி தொண்டர்களை சந்தித்து வருகிறார். லோக்சபா தேர்தலை முன் வைத்து அவர் மேற்கொண்டு பிரச்சாரத்தை அதிமுக, திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் உற்று நோக்கி வருகின்றனர்.
உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல்.. விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!
தனித்து களம் காணும் கமல்
லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியிலும் சேராமல், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கமல் முடிவு செய்துள்ளார் என்று அவரது கட்சி உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து விருப்ப மனு பெறும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கட்சியினர் மனு
அதில் ராமநாதபுரம் தொகுதியில் கமல் நிற்க வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் பலர் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து கட்சியினர் கூறி இருப்பதாவது:
அரசியல் விமர்சனம்
புதிய கட்சி, அரசியல் குழந்தை என்று கமலஹாசன் மீது பல்வேறு தருணங்களில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கிராமசபை கூட்டங்களின்போது மக்கள் தரும் உற்சாகமே அவருக்கு தேர்தலில் தனித்து போட்டியிடும் துணிச்சலை தந்திருக்கிறது.
வலியுறுத்தி வருகிறோம்
அவரை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருகிறோம். சொந்த மாவட்டம்... அதோடு கமலின் தந்தை டி.சீனிவாசன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
கட்சியினர் நம்பிக்கை
சிறந்த வழக்கறிஞர். மக்களிடையே நன்மதிப்பு பெற்றவர். எனவே, கமல் இத்தொகுதியில் வெற்றிபெற்றால் மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.