காமராஜர் ‘கே பிளான்’: திமுக வளர்ச்சியை தடுக்கவா? உட்கட்சி எதிரிகளை ஒடுக்கவா?
சென்னை: 'கே பிளான்' என்பது திமுகவை வீழ்த்துவதற்காக காமராஜால் கொண்டுவரப்பட்ட திட்டமா? அல்லது தன் சொந்த கட்சிக்குள் இருந்த அரசியல் எதிரிகளை ஓரங்கட்டுவதற்காக அவரால் கொண்டுவரப்பட்ட திட்டமா? அது பற்றி அந்தக் காலத்தில் எழுந்த விவாதங்கள் என்ன? கூறப்பட்டது என்ன?
மூன்றாவது முறையாக 1962இல் ஆட்சியைத் தக்கவைத்து முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் உள்ளபடியே காமராஜ் மனம் மகிழ்ச்சியாக இல்லை. 50 தொகுதிகளை திமுக வசப்படுத்தியிருந்ததால் அவர் கதி கலங்கிப்போய் இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சட்டசபையில் 139 தொகுதிகளில் வெற்றிபெற்று, மக்களவை 31 இடங்களைப் பெற்றிருந்தது. திமுக மக்களவையில் 7 இடங்களைப் பிடித்திருந்தது.

ராஜகோபாலாச்சாரியின் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்குத்தான் இலாபம் ஏற்பட்டது. சட்டசபையில் சுதந்திரக் கட்சிக்கு வெறும் 6 தொகுதிகள்தான் கிடைத்தது. மக்களவைத் தேர்தலில் ஒரு இடம்கூட ராஜாஜிக்குக் கிடைக்கவில்லை. திமுக கூட்டணியிலிருந்த பார்வேர்ட் பிளாக் சட்டசபையில் 3 இடங்களும் மக்களவையில் 1 இடமும் கிடைத்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சட்டசபையில் 2 உறுப்பினர்களும் மக்களவையில் 2 உறுப்பினர்களும் கிடைத்தனர். சட்டசபையில் மொத்தம் அந்தக் காலத்தில் 206 இடங்கள் இருந்தன. மக்களவைத் தொகுதிகள் மொத்தம் 41 ஆகும்.
ஈ.வெ.கி.சம்பத் விமர்சனம்:
திமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்தவுடன் உட்கட்சிக்குள் ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாகச் சலசலப்பு எழுந்தது. ஈ.வெ.கி.சம்பத். "ராஜாஜி பாச வலையில் சிக்கிய திமுக இனி தப்பமுடியாது" என்று கும்பகோணத்தில் நடந்த கூட்டத்தில் சம்பத் பேசினார். கூட்டணியிலிருந்த முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அண்ணாதுரை கேட்ட 'திராவிட நாடு' கோரிக்கை மனநிலைக்கு மாறாக இருந்தன.
காங்கிரஸ் கட்சியை அகில இந்திய அளவில் வளர்க்க காமராஜ் புதிய திட்டத்தைத் தீட்டினார். அதற்கு 'கே பிளான்' என்று அதாவது 'காமராஜ் திட்டம்' எனப் பெயர் சூட்டினார். மூத்த தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தை இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப் பணிக்குத் திரும்பவேண்டும் என முன்மொழிந்து தன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் காமராஜ். ஆகவே, 1963 செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி 'சுதேசமித்திரன்' பத்திரிகை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக எம்.பக்தவத்சலம் பதவியேற்றதைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
திராவிட இயக்கம் என்பது முதலியார் சமூகத்தினர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தது. அண்ணாதுரை உள்ளிட்ட சிலர் தலைவர்கள் அச்சமூக பின்னணியைக் கொண்டிருந்தனர். பக்தவத்சலத்தை காமராஜ் முன்மொழிந்ததற்குப் பின்னால் இந்தச் சமூக அரசியல் பின்னணியும் ஒளிந்திருந்ததாகப் பேச்சு அடிப்பட்டது.
புதிய முதல்வர் பக்தவத்சலம்:
முறைப்படி தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக பக்தவத்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பதவி அவர் கைக்குச் சென்றது. இவரை ஆதரித்து 130 ஒட்டுகள் விழுந்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்.வி.சாமிநாதன் தோல்வியடைந்தார். இவருக்கு 21 ஓட்டுகள் கிடைத்தன. புதிய முதல்வருடன் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என காமராஜ் வேண்டுகோள் விடுத்தார். வாக்கெடுப்பில் 153 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
காமராஜ் இந்தத் திட்டத்தை முன்மொழிந்ததற்குப் பின்னால் வேறு திட்டம் இருப்பதாக காங் மூத்த தலைவர்கள் கூறினர். அவருக்கு ஆதரவாக இல்லாத மூத்தவர்களை ஓரங்கட்டவே இதை காமராஜ் செய்தார் என முணுமுணுப்புகள் ஒலித்தன. "திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கைக் கண்டு பயந்துதான் அதற்கு ஒரு பரிகாரமாகத்தான் காமராஜ் தமது திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்" ராஜாஜி தெரிவித்தார்.
ஆனால், பிரதமர் நேரு இத்திட்டத்தை வரவேற்றார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே கட்சிக்குள் அவரது கொள்கைக்கு எதிரான வலதுசாரிகள் வளர்ந்துவந்தனர். ஆகவே அவர் அடிக்கடி பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன் என அச்சுறுத்தி வந்தார். இந்தியா மீதான சீனப் போர் அவரை வலிமையான பிரதமராக மாற்றியது.
மத்திய மத்திரி பதவியைப் பறிகொடுத்த எஸ்.கே.பாட்டீல், "திமுகவை முறியடிப்பதற்காகவே காமராஜ் தாம் பதவியிலிருந்து விலகி கட்சியைப் பலப்படுத்துவதற்கு முன்வந்துள்ளார்" என்றார். மற்றொரு பக்கம் வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 'சத்ய கங்கை' ஆசிரியர் பகீரதன் சில ஆண்டுகள் கழித்து காமராஜ் பதவி விலகியது தொடர்பாக சில உள் ரகசியங்களைக் கூறும் மலபார் கிறிஸ்து கல்லூரியின் வைஸ் பிரின்ஸ்பால் யேசுரத்னம் எழுதிய கட்டுரையை வெளியிட்டிருந்தார்.
காமராஜ் மீதான விமர்சனம்:
அதில், "1946இல் காந்தியால் புறக்கணிக்கப்பட்டவர் காமராஜ். இவரைக் காந்தி 'ஹரிஜன்' பத்திரிகையில் 'கிளிக்' (சின்ன கூட்டம்) என்று குறிப்பிட்டிருந்தார்" என்பதை விளக்கிக் காட்டியிருந்தார். ஆனால், காந்தியின் கட்டுரையைப் படித்த பின் காமராஜ் தன் பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்தார். அதை மீண்டும் காமராஜ் ஏற்க வேண்டும் என வேண்டினார் காந்தி.
காலம் கடந்து 'காங்கிரஸை முடக்க காமராஜ் வந்திருக்கிறார்" என்று 1969இல் சீதாராம் கேசரி எச்சரித்தார். இந்தக் கதைக்கு மாறாக 'காமராஜ் திட்டம்' காரணமாக நேரு, லால்பகதூர் சாஸ்திரி, மொராஜ் தேசாய் போன்ற மூத்த தலைவர்கள் மத்தியில் காமராஜ் செல்வாக்கு உயர்ந்து என்கிறார் பத்திரிகையாளர் சாவி. டி.டி.கே.கிருஷ்ணமாச்சாரி வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் காமராஜைக் கட்டிப் பிடித்து, அவரைத் தூக்கிப்போட்டு ஆடிய காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது என்றும் இவர் எழுதியுள்ளார்.
பதவி ஆசையே இல்லாதவர் காமராஜ் என்பது பொதுவான கருத்து. ஆனால், 'சத்ய கங்கை' வெளியிட்ட கட்டுரையில் பிரகாசத்தை முதன் மந்திரி பதவியிலிருந்து இறக்கியதற்குப் பின்னால் காமராஜ் கை வேலை செய்தது என்றும் 1948இல் சுப்பராயனை கீழ் இறக்கிவிட்டு ஓ.பி.ராமசாமி ரெட்டியார் பதவி ஏறியதும் காமராஜ் ஆதரவில்தான். 49இல் ரெட்டியாரை விலக்கிவிட்டு குமாரசாமி ராஜாவை பதவியேறச் செய்ததும் காமராஜ் திட்டப்படிதான் என ஒரு புதிய கோணத்தில் விவாதித்திருந்தார் யேசுரத்னம்.
சத்தியமூர்த்தி ஆதரவு காமராஜுக்கு இருந்தது. காந்தியின் செல்வாக்கில் ராஜாஜி தமிழ்நாட்டில் பெரும்புள்ளியாக இருந்தார். எந்தப் பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்திலிருந்து பண்ணையார்கள் ஆதிக்கம் அதிகம் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கே சென்றவர் காமராஜ். அவரது சகாப்தம் முடிந்தபோது தமிழ்நாட்டில் காங்கிரஸின் ஆட்சி அதிகாரமும் முடிந்துபோய் இருந்தது. அதுவே நிஜம்.












Click it and Unblock the Notifications