காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டது என்று பொருள் - கவிஞர் வைரமுத்து
சென்னை: கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 123 ஆவது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. காமராஜரின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் காமராஜரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
காமராஜரின் 123 ஆவது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், கட்சியினர், காமராஜரின் புகழைப் போற்றி அவரது வாழ்நாள் சாதனைகளை நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து அவரை புகழை நினைவுகூர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''படிக்காத காமராசர், பள்ளிகள் செய்தார். வீடுகட்டாத காமராசர், அணை கட்டினார். புத்தகம் எழுதாத காமராசர், நூலகம் திறந்தார். கையில் காசுவைத்துக்கொள்ளாத காமராசர், ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார். மற்றவருக்கு நாற்காலி தந்து தன் பதவி தான்துறந்தார். கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டாலும் காந்தி காணாத துறவறம் பூண்டார்.
காமராசர் நினைக்கப்பட்டால் அறத்தின் சுவாசம் அறுந்துவிடவில்லை என்று பொருள். காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டது என்று பொருள் நான் உங்களை நினைக்கிறேன் ஐயா'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications