அனுமதி இல்லாத ரூட்டில் விநாயகர் சிலை.. கனல் கண்ணன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு!
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதிக்கப்படாத வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் உள்ளிட்ட 53 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். இதேபோல் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 பகுதிகளில் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதிக்கப்படாத வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் உள்பட 53 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரன், நடிகரும் சண்டை பயிற்சியாளருமான இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன் உள்பட 53 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications