கனிமொழி - பிடிஆர் உள்பட 2 அமைச்சர்கள் ‛மிஸ்ஸிங்’.. அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்காதது ஏன்?
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 பேர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 4 பேர் புதிய அமைச்சர்களாகி உள்ளனர். மேலும் தமிழக துணை முதல்வர் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 6 பேரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர் ஆகியோர் கலந்து கொள்ளாத நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சேலம் வடக்கு எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், ஆவடி நாசரகு்கு சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை பொறுப்பில் இருந்து பொன்முடி வனத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், கயல்விழி செல்வராஜ்க்கு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பதில் மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் மனைவி கீர்த்திகா, மகள் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். ஆனால் விழாவில் கனிமொழி எம்பி பங்கேற்கவில்லை. திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராகவும், கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் உள்ளார். இது எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டாலினின் தங்கையாகவும், உதயநிதி ஸ்டாலினின் அத்தையாகவும் உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் கனிமொழி எம்பி இந்த விழாவில் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. விழாவுக்கு கனிமொழி எம்பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? இல்லாவிட்டால் அழைப்பு விடுக்கப்படவில்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ள வேளையில் நிச்சயம் கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் அவர் பங்கேற்கவில்லை என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். இருப்பினும் விழாவில் பங்கேற்காதது பற்றி கனிமொழி தரப்பில் எந்த விளக்கமும் தரப்பபடவில்லை.
அதேபோல் இன்றைய அமைச்சரவை மாற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்கவில்லை. பொதுவாக அமைச்சரவை மாற்றம், புதிய அமைச்சர்கள் பதவியேற்கும்போது அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். அதன்பிறகு ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்து கொள்வார்கள். இதனால் அனைத்து அமைச்சர்களும் விழாவில் பங்கேற்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய விழாவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்கவில்லை.
இதனால் புதிய அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி எடுத்த புகைப்படத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இல்லை. அவர் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆருக்கு பின்னால் நிற்க வேண்டும். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காததால் அந்த இடம் காலியாக விடப்பட்டுள்ளது. இதுவும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. இருப்பினும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர் ஆகியோர் விழாவில் பங்கேற்காதது பற்றி இன்னும் எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதனால் பல யூகங்கள் கிளம்பின.
இதற்கிடையே தான் தற்போது அவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. ்அதாவது அமைச்சர் பிடிஆரின் தாயார் மதுரையில் உள்ளார். அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அங்கு சென்றார். அதன்பிறகு மதியம் அவர் 1.30 மணிக்கு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட தயாராக இருந்தார். ஆனால் அவர் புறப்படும் விமானத்தில் கோளாறு ஏற்பட்ட நிலையில் அவரால் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் அமைச்சர் சிவசங்கர் தற்போது லண்டனில் உள்ளார். அவரது மகன் அங்கு மருத்துவ படிப்பு படித்து வரும் நிலையில் சிவசங்கர் கடந்த 26ம் தேதியே லண்டன் சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அனுமதியுடன் அவர் லண்டன் சென்றார். நேற்றைய தினம் தான் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால் உடனடியாக சிவசங்கரால் லண்டனில் இருந்து வர முடியவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும் கூட துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சராக பொறுப்பேற்றவர்களுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கனிமொழி எம்பி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதாவது இன்று காலையில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ‛‛நான் யாருக்கும் அட்வைஸ் கொடுக்கிறது இல்லை. யாருக்கு என்ன கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு தான் முதலைமைச்சர் சரியாக கொடுத்து உள்ளார்கள். அதனால் அட்வைஸ் எல்லாம் இந்த காலத்தில் யாருக்கும் அவசியம் இல்லை.
எல்லாருக்குமே என்ன பண்ண வேண்டும்? என்பது நன்றாகவே தெரியும். நான் எனது மனமார்ந்த் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என கனிமொழி கூறினார். முன்னதாக இன்று உதயநிதி ஸ்டாலின் தனது அத்தையான கனிமொழி எம்பியிடம் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛திராவிட இயக்க கொள்கைவழி நின்று, தமிழ்நாட்டினை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத்தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பணிகளை மேலும் செழுமைப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும், கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
பல்வேறு இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து மீண்டும் அமைச்சரவையில் இணையும் அன்புச் சகோதரர் செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், புதியதாய் அமைச்சரவையில் பொறுப்பேற்கும் கோவி செழியன், ராஜேந்திரனுக்கும் எனது அன்பும் - வாழ்த்துகளும்!'' என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications