தேர்தல் முடிவுக்குப் பின்... அழகிரியின் திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கனிமொழிக்கு?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் திமுகவின் தென்மண்டல் அமைப்புச் செயலாளர் பதவி கனிமொழி எம்.பி.க்கு வழங்கப்படலாம் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கவிஞரான மகள் கனிமொழியை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார். அதேநேரத்தில் திமுக கட்சிப் பதவிகளில் கனிமொழிக்கு பெரிய முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது.
கருணாநிதி மறைவுக்கு பின்னர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெல்வது என வியூகம் வகுத்தார் கனிமொழி. இதற்காகவே தூத்துக்குடி தொகுதியை தேர்வு செய்து சில ஆண்டுகளாக களப் பணிகளையும் இடைவிடாது செய்தார் கனிமொழி. இதன் விளைவாக கடந்த லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி திமுக எம்.பியானார் கனிமொழி.

முக்கியத்துவம் எப்போது?
திமுகவில் பல்வேறு பிரிவுகளுக்கு பொறுப்பாளர்கள் இருப்பதைப் போல மகளிர் அணி செயலாளர் பதவியில் கனிமொழி இருக்கிறார். கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலின், அழகிரி இருவருமே ஒருகாலத்தில் திமுகவில் முக்கிய பதவிகளில் இருந்தனர். ஆனால் கனிமொழிக்கு அதேபோல் திமுகவில் முக்கிய பதவி கிடைக்கும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பு.

ஏறுமுகத்தில் உதயநிதி
இதனிடையே தற்போதைய சட்டசபை தேர்தலில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மூவரும்தான் படுதீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டனர். வழக்கமாக திமுகவில் 2-ம் கட்ட தலைவர்கள் பிரசாரம் செய்வது இந்த முறை குறைவாகவே இருந்தது. சட்டசபை தேர்தலில் திமுக வெல்லும் நிலையில் உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறவும் வாய்ப்பிருக்கிறது.

கனிமொழிக்கு முக்கியத்துவம்
அப்படி உதயநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் கனிமொழிக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை; ஓரம்கட்டப்படுகிறாரா? என்கிற விமர்சனங்கள் எழும். இதனை தவிர்க்கும் வகையில் திமுகவின் தென்மண்டல அமைப்பு செயலாளர் என்கிற அதிமுக்கியமான பதவியை கனிமொழிக்கு கொடுக்கலாம் என நினைக்கிறதாம் திமுக தலைமை.

கனிமொழியிடம் தென்மண்டலம்?
ஸ்டாலினுக்கு இணையாக மு.க. அழகிரிக்கு கொடுக்கப்பட்ட பதவி இது. அழகிரிக்கு பின் இந்த பதவி யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இப்போது கனிமொழிக்கு தாரைவார்க்கலாம் என திமுக தலைமை முடிவு செய்திருப்பது அவரது ஆதரவாளர்களை பெரு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

முக்கியமான பதவி உறுதி
அதேநேரத்தில் இப்படி எல்லாம் கனிமொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி எதிர்ப்பு கடுமையாக இருந்தால் கனிமொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கட்சியின் தலைமை கழக பதவிகளில் ஒன்று அமரவைக்கப்படலாம் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications