கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள்... நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி கடிதம்
சென்னை: வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;

"கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி 27-3-2020, 23-05-2020 ஆகிய நாட்களில் வெளியிட்ட அறிவிப்புகளின்படி வங்கிக் கடன், கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட கடன்களின் தவணை செலுத்துவதற்கு மார்ச் முதல் ஆகஸ்டு வரை ஆறு மாதங்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வங்கிகளிலும் மைக்ரோ நிதி நிறுவனங்களிலும் வாங்கிய கடனுக்கான தவணைகளை செலுத்துமாறு கட்டாயப்படுத்துகிறார்கள் என்று மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் இருந்து எனக்கு முறையீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறி வங்கிகளும், மைக்ரோ நிதி நிறுவனங்களும் இப்படிக் கட்டாயப்படுத்துகின்றன.

இந்த நிலைமையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும், மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
மேலும், இந்த நெருக்கடியான மாதங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் அனைத்து வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டுகிறேன்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications