கணீர்மொழியால் கவனம் ஈர்த்த கனிமொழி! ''துணிச்சல்மிக்க தமிழ் பெண்''! எல்லை கடந்து கிடைத்த பாராட்டு!
நாடாளுமன்ற உரை மூலம் கவனம் ஈர்த்த கனிமொழி.
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிரான தனது நாடாளுமன்ற உரையின் மூலம் தேசியளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அரசியல் விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கனிமொழியை 'துணிச்சல் மிக்க தமிழ் பெண்' எனக் குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார்கள்.
இதேபோல் கனிமொழி, சுப்ரியா சுலே, மஹுவாமொய்த்ரா ஆகிய 3 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர்களது நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சமஸ்கிருதம்
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி எம்.பி. ,மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு ரூ.198 கோடி நிதியும், தமிழ் மத்திய செம்மொழி ஆய்வு மையத்துக்கு பதினொன்றே முக்கால் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டதை ஒப்பிட்டார். பிரதமர் மோடி தமிழின் பெருமையை பேசினால் மட்டும் போதுமா நிதி ஒதுக்கீட்டில் அல்லவா அதை காட்டியிருக்க வேண்டும் எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல் இந்தி திணிப்பு குறித்தும் அப்போது பேசினார்.

சிலை திறப்பு
கனிமொழியின் இந்தப் பேச்சு தேசியளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு அவருக்கு பாராட்டுக்களையும் தேடி தந்திருக்கிறது. அண்மைக் காலமாக தமிழ்நாடு கடந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். இப்போது கூட நாளை மறுநாள் ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜேபி சிலையை திறந்து வைக்குமாறு கனிமொழிக்கு அழைப்பு வந்திருக்கிறது.

தேதி கொடுக்கவில்லை
ஆனால் தனக்கிருக்கும் பணிச்சுமை காரணமாக அந்த விழாவில் பங்கேற்க தேதி கொடுக்க இயலாது எனக் கூறியிருக்கிறார் கனிமொழி. இப்படியாக எல்லைகள் கடந்து தனக்கான அரசியல் அடையாளத்தை விரிவுப்படுத்தி வருகிறார் கனிமொழி எம்.பி. அதேபோல் ஆளுநருக்கு எதிரான அவரது நாடாளுமன்ற பேச்சும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர், விமர்சகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

திமுக எம்.பி.க்கள்
பேசி பேசியே வளர்ந்த இயக்கம் திமுக என்பதால் அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேச சொல்லித் தர வேண்டியது இல்லை. அண்மையில் கூட திருச்சி சிவா கூறிய உப்புமா கதை மாநிலங்களவை தலைவரையே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படி அமைந்திருந்தது.












Click it and Unblock the Notifications