கருணாநிதி உருவப்படம் திறக்கும் நாள்.. தமிழக மக்கள் பெருமை கொள்ள வேண்டிய நாள்.. கனிமொழி எம்பி பேச்சு
சென்னை: தமிழக சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படும் நாள் தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டிய நாள் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டசபை நூற்றாண்டு விழா நாளை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
இதில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைக்கிறார்.
கனிமொழி எம்பி பேச்சு
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்நிலையில், சட்டசபையில் கருணாநிதியின் படம் திறக்கப்படும் நாள் தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டிய நாள் எனக் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
பெருமை கொள்ள வேண்டிய நாள்
தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு வந்த திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தன் வாழ்நாளில் தேர்தலில் தோல்வியையே பார்க்காத தலைவர் கருணாநிதி. சட்டமன்ற வளாகத்தில் அவரது படம் திறக்கப்படும் நாள் தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டிய நாள்.
ஓபிசி இட ஒதுக்கீடு
கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்வதில் பொதுமக்களில் பலருக்குத் தயக்கம் இருப்பதால் , விரைவில் செயல்படுத்தப்பட உள்ள 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. திமுக முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றிதான், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
ஆனால் இது முழுமையான வெற்றியல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார். மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முறையாக நடைபெறவிடவில்லை. பெகாசஸ் போன்ற முக்கிய விவகாரம் குறித்துக்கூடப் பேச மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை" என்று அவர் கூறினார்.