“சங் பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி.. பாஜக விசுவாசம் அப்படி”.. விளாசிய கனிமொழி!
சென்னை: "பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்." என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
உலக தாய்மொழிகள் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், "நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன். தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், அந்த பதிவோடு, ஒரு புகைப்படத்தையும் இணைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதில், தமிழின் பெருமைகளை விளக்கும் வகையில் படங்கள் இடம்பெற்றிருந்தன. எடப்பாடி பழனிசாமி பகிர்ந்திருந்த படத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காவி உடை திருவள்ளுவர் படத்தை பகிர்ந்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, அந்தப் படத்தை நீக்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. எனினும், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications