சமூக நீதிக்காக, ராஜ்யசபாவில் கடைசிவரை போராடிய கனிமொழி.. காங்கிரசும் கைவிட்ட சோகம்
சென்னை: உயர் ஜாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கும் அரசியல் சாசன திருத்த மசோதாவிற்கு எதிராக ராஜ்யசபாவில் கடைசிவரை மிக கடுமையாக போராடிய ஒரே உறுப்பினர் திமுக எம்.பி. கனிமொழிதான்.
தனது தந்தை கருணாநிதியின் உயிர்மூச்சான, சமூக நீதி கொள்கை, கண்முன்னால் நசுக்கப்படுவதை பார்த்து அவர் வழக்கத்தைவிட மிகுந்த ஆவேசம் காட்டியதை பார்க்க முடிந்தது.
ஆனால், அவரது நியாயமான கோரிக்கைக்கு, காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சி கூட கை கொடுக்கால் கவிழ்த்ததுதான் பெரும் சோகம்.

ராஜ்யசபாவில் வாதம்
லோக்சபாவில், 10 சதவீத இட ஒதுக்கீடுக்கான அரசியல் சாசன (124வது திருத்தம்) சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ராஜ்யசபாவில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ராஜ்யசபாவில், இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக, திமுக உறுப்பினர் கனிமொழி கடும் வாதங்களை முன் வைத்தார். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும். கல்வி கற்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது என்று சாடினார் கனிமொழி.

என்ன அடிப்படை
நாட்டில் இன்றும் ஜாதி பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒருவர் மதம், பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் ஜாதியை மாற்ற முடியாது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரியானது அல்ல என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இட ஒதுக்கீடு அறிமுகத்திற்கு முன்பாக இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆய்வுகளை நடத்திதான், இட ஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட்டன. அப்படியான என்ன ஆய்வை நீங்கள் மேற்கொண்டீர்கள்? எதன் அடிப்படையில் 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது? எனவே, இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

ரங்கராஜன் ஆதரவு
இதனிடையே, தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், டி.கே.எஸ். ரங்கராஜன், பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆதரவாக உரையாற்றினார். அவரது அருகில் சென்ற கனிமொழி நீங்கள் செய்வது அநியாயம் என்று கோபத்தோடு கூறினார். சமூகநீதிக்கு எதிரான ரங்கராஜனின் பேச்சை அவையிலேயே கனிமொழி கண்டித்தது வரவேற்பை பெற்றுள்ளது.

தீர்மானம்
இதனிடையே, இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் முன்மொழிந்தார் கனிமொழி. அனைத்து உறுப்பினர்களும் பேசி முடித்த பிறகு இரவு 10 மணியளவில், இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆனால், கனிமொழியின் இந்த கோரிக்கைக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் மட்டுமே ஆதரவு அளித்தன. வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 154 எம்.பி.க்கள், கனிமொழி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். ஆதரவாக கிடைத்த வாக்குகள் 18 மட்டுமே.

சட்டம்
இதையடுத்து, ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து சட்டத் திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 165 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். 7 பேர் எதிர்த்து வாக்களித்தனர். சட்டம் நிறைவேற்றப்பட்டது. தனக்கு ஒதுக்கப்பட்ட கால அளவில் முடிந்த அளவுக்கு உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை எதிர்த்து பேசிய கனிமொழி, ரங்கராஜனின் பேச்சை கண்டித்தது, தேர்வுக்குழுவிற்கு அனுப்ப போராடி தீர்மானம் கொண்டு வந்தது போன்றவை சமூக நீதியை விரும்புவோரிடம் வெகுவாக பாராட்டுகளை பெற்றுள்ளன. முன்னதாக, ஹிந்தியில் பேசிய ராஜ்யசபா தலைவரிடம், எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள் என கூறி, ஹிந்திக்கு எதிராக முழங்கினார் கனிமொழி. கனிமொழியின் தீரமான நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications