பெண் காவலர்களுக்கான புதிய சலுகை அறிவிப்பு.. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி
சென்னை: மகப்பேறுக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு புதிய சலுகையுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.பி. கனிமொழி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு பணி மூப்புக்கு விலக்கு அளித்து அவர்களின் பெற்றோர், கணவர் வசிக்கும் ஊர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் பணி மாறுதல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் பணியாற்றி வரும் காவலர்கள், வீரர்கள், அதிகாரிகளின் பணியைப் பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின்போது சிறப்பாக பணியாற்றிய, செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி காவல் துறை, தீயணைப்பு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம், உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள் பதக்கம் அறிவிக்கப்படும். அந்த வகையில், சுதந்திர தினத்தையொட்டி பதக்கம் பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பதக்கம் அறிவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து, அவர் பேசுகையில் தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது குழந்தைகள் பராமரிப்பில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு பணி மூப்புக்கு விலக்கு அளித்து அவர்களின் பெற்றோர், கணவர் வசிக்கும் ஊர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் பணி மாறுதல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிவித்தார்.
மேலும், மக்களைக் காப்பாற்றுவது காவலர்களாகிய உங்களின் கடமை. இதனை எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்றி தாருங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். குற்றங்களைக் குறைக்கும் துறையாக மட்டுமில்லாமல் குற்றங்கள் நடப்பதற்கு முன்பாக தடுக்கும் துறையாக காவல்துறை செயல்பட வேண்டும். குற்றம் இல்லாத மாநிலமாக, போதைப் பொருள் இல்லாத மாநிலமாக, பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக நம்ம மாநிலம் உருவாக வேண்டும். குற்றங்களை எங்கும் யாராலும் நடத்தப்படக் கூடாது என்றார்.
இதைத்தொடர்ந்து, மகப்பேறுக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு புதிய சலுகையுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.பி. கனிமொழி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தல் கூறியுள்ளதாவது: காவல் துறையில் மகளிர் பங்காற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகப்பேறு சமயங்களில் விடுப்பு இல்லாமல் பல இக்கட்டுகளுக்கு உள்ளான பெண் காவலர்களுக்கு, மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது.
மேலும், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள், குழந்தையைப் பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குக் கணவர் அல்லது பெற்றோர் வசிக்கக் கூடிய மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications