கண்ணதாசனா, காளிதாசனா.. அதுவிடுங்க, 34 தமிழக அமைச்சர்களும் அலசி அலசி ஆராயறாங்களாமே
சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் பலரது கவனத்தை பெற்று வருகின்றன. அதிலும் நகைச்சுவையான சம்பவமும், சர்ச்சை சம்பவமும் என ஆங்காங்கே நடந்து வருகிறது.. இதுதான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அமைச்சர்கள் தங்கள் துறைகளைத் தெரிந்துகொள்ளப் படும் சிரமங்களும், தங்களது நிர்வாகத்தை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!
சென்னை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரான மருத்துவர் ராஜுவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தவெக சார்பில் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அவர், தனது முதல் அதிகாரப்பூர்வ வருகையின்போது, முதல்வர் ஜோசப் விஜய் தனக்கு வழங்கிய வாய்ப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டே, எதிர்பாராதவிதமாக தன்னை சுற்றுலாத்துறை அமைச்சர் என்று தவறாகக் குறிப்பிட்டார்.

தவெக புதிய அமைச்சர்கள்
தன்னிடம் வைக்கப்பட்ட இந்த நம்பிக்கைக்கு தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, தான் வகிக்கும் அமைச்சகம் இதுவல்ல என்பதை அறியாமல் அவர் பேசியது அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர் ராஜுவ் தனது துறையை தவறாகக் குறிப்பிட்டதை கவனித்த அருகில் இருந்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்பதை மெதுவாக நினைவுபடுத்தினார்கள்.
உடனே தனது தவறை உணர்ந்து சட்டென சுதாரித்துக்கொண்ட அமைச்சர்,, பதற்றத்துடன், மீண்டும் முதல் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாமா எனக் கேட்டுவிட்டு, பிறகு தான் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் என்பதைத் திருத்திக்கொண்டு பேசத் தொடங்கினார்.
துறை தெரியாமல் தடுமாறிய அமைச்சர்
அமைச்சரின் இந்தச் சிறு தடுமாற்றம் அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே கலகலப்பை உண்டாக்கி விட்டது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த சம்பவம், வெறும் தனிப்பட்ட அமைச்சரின் தடுமாற்றமாக மட்டும் பார்க்கப்படவில்லை... மாறாக, தமிழக அரசியலில் முற்றிலும் புதியதொரு அத்தியாயத்தைப் பதிவு செய்துள்ள தவெக ஆட்சியின் தற்போதைய கள எதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள 34 அமைச்சர்களில், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் மட்டுமே முந்தைய நிர்வாக அனுபவம் கொண்டவர் ஆவார்.. மற்ற அமைச்சர்கள் எல்லாருமே அரசு நிர்வாகத்திற்கு முற்றிலும் புதியவர்கள் என்பதால், ராஜுவ் போன்றவர்களின் இந்தத் தடுமாற்றங்கள் ஆச்சரியத்தை விடவும், ஒருவிதமான எதிர்பார்ப்பையே மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன.
பாடம் படிக்கும் புதிய அமைச்சர்கள்
வெளியே இருந்து ஒரு துறையை அணுகுவதற்கும், அமைச்சராக அதன் பொறுப்புகளைச் சுமப்பதற்கும் உள்ள பிரம்மாண்டமான இடைவெளியை, இப்போதுதான் ஒவ்வொரு புதிய அமைச்சரும் உணர்ந்து வருகிறார்கள்.
விரைவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க போகிறது.. எதிர்க்கட்சிகளின் சரமாரியான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்த புதிய அமைச்சரவை இப்போது உள்ளது.
இதற்காக தலைமைச் செயலகம் தற்போது ஒரு தீவிரமான "பாடம் கற்கும்" கூடாரமாக மாறியிருக்கிறதாம்.. அதாவது ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, மூத்த அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்களாம்.
வித்தியாசமான அனுபவம்
கொள்கை விளக்கக் குறிப்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு, இரவு பகலாக திட்டங்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் பணியிலும் புது அமைச்சர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தலைமைச் செயலாக வட்டாரங்கள் கூறுகினற்ன..
அதிகாரிகளின் பார்வையில் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும், அமைச்சர்களின் இந்த ஆர்வமும் தேடலும், கூடிய விரைவில் அவர்கள் துறையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேறுவார்கள் என்ற நம்பிக்கையை அதிகாரவர்க்கத்திடையே விதைத்துள்ளது. எதையும் கற்றுக் கொள்ளும் இந்த ஆரம்பக்கட்ட ஆர்வம், தவெக அரசு நிர்வாகத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications