லாக்டவுன் தளர்வு: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் பேருந்து சேவை.. இன்று முதல் இயங்கும்!
சென்னை: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 23) முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வருகிறது. தினசரி கேஸ்களின் எண்ணிக்கை தினமும் குறைந்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,709 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா கேஸ்கள் சரிந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு பல்வேறு முக்கியமான தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய தளர்வாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கேஸ்கள் குறைந்துவிட்டது. இதனால் அந்த மாநிலங்களுக்கு மீண்டும் செப்டம்பர் 1 முதல் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிற்கு பேருந்து சேவையை தொடங்க கர்நாடகாவும் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 250 பேருந்துகள் இயக்கப்படும் அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பல்வேறு வழிகளில் இயக்கப்படும் பேருந்துகள் இன்று காலையில் இருந்து இயக்கப்படும். கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கணிசமான குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி தமிழ்நாடு கர்நாடகா இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு பயணிக்க ஆர்டிபிசிஆர் சோதனை முடிவுகள் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கேஸ்கள் குறைந்த காரணத்தால் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications