ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி திடீர் மாற்றத்துக்கு காரணமான கர்நாடகா பெண் பத்மாவதி!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மனீஷ் திடீரென மாற்றப்பட்டதற்கு காரணமே கர்நாடகா பெண் பத்மாவதி தாக்கல் செய்த வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதுதான் என கூறப்படுகிறது. இதர வேட்பாளர்கள் எதிர்ப்புக்குப் பின்னரே பத்மாவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. முன்னதாக முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு நாளை தொடங்குகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 58 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் களத்தில் மொத்தம் 47 பேர் இருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேற்று சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போதுதான் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த வேட்பாளரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என இதர வேட்பாளர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து பத்மாவதியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
பரபரப்பை கிளப்பிய பத்மாவதி யார்?
கர்நாடகா மாநிலம் பெங்களூர் உதயாநகர், மஞ்சுநாத்சுவாமி நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவண்ணா. இவரது மனைவிதான் பத்மாவதி. இவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரிகள், கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் தமக்கு வாக்கு உள்ளதாக பத்மாவதி தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டு தேர்தலில் வெளிமாநில வாக்காளர் ஒருவர் போட்டியிட முடியாது என்பதை சுட்டிக்காட்டி அவரது வேட்பு மனுவை நிராகரித்தோம் என்றனர்.
பத்மாவதியால் தேர்தல் அதிகாரி மனீஷ் மாற்றம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் கர்நாடகா பத்மாவதியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி மனீஷ் ஏற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் மனீஷ் நடவடிக்கைக்கு வேட்பாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து இரவோடு இரவாக மனீஷ் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் ஶ்ரீகாந்த் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications